கலை நிகழ்ச்சிகளுக்கு மூட்டை முடிச்சுகளுடன் செல்லும் நடிகைகளை அரைநாள் போராட்டத்தில் காணலையே!
நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டனும்னா மூட்டை முடிச்சுகளுடன் செல்லும் குஷ்பு, ராதிகா உள்ளிட்டோர் காவிரி வாரியத்துக்காக போராட்டத்தில் காணவில்லை.
சென்னை: நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டனுமா, பார்ட்டி நிகழ்ச்சிகளா மூட்டை முடிச்சுகளுடன் செல்லும் குஷ்பு, ராதிகா, சுகன்யா உள்ளிட்டோர் காவிரி வாரியத்துக்கான போராட்டத்தில் எட்டிக் கூட பார்க்கவில்லையே ஏன்.
தமிழர்களின் ஆண்டாண்டு பிரச்சினையாக இருந்து வருவது காவிரிதான். விவசாயிகளின் துயரைத் துடைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இளைஞர்கள், விவசாயிகள், தமிழக எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் காவிரிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்கத்தினரும் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தை நடத்தினர்.
ரஜினி, கமல் பங்கேற்பு
இந்த போராட்டத்தில் விஜய், விக்ரம், ரஜினி, கமல், சத்யராஜ், பிரசாந்த், நடிகைகள் சச்சு, தன்ஷிகா, ஸ்ரீபிரியா, அம்பிகா, ரேகா,லலிதகுமாரி, ஆர்த்தி, பசி சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டுவிட்டரிலும் கூட்டங்களிலும் மோடிக்கு எதிராக வாய் சவடால் விடும் குஷ்புவை காணவில்லை.
முன்னணி நடிகைகள்
முன்னணி நடிகைகள் சுகன்யா, ராதிகா, ராதா, நமீதா, நிரோஷா, சுஹாசினி, தமன்னா, ஹன்ஷிகா, பூர்ணிமா பாக்யராஜ், மீனா, நளினி, சீதா உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொள்ளவில்லை. வேறு மாநிலங்களை சேர்ந்த நடிகைகளாக இருந்தாலும் தமிழகத்தில் புகழ் பெற்றமைக்காக காவிரி போராட்டத்தில் பங்கேற்றிருக்கலாம். ஷூட்டிங் இருந்திருந்தாலும் அதை கேன்சல் செய்துவிட்டு மக்களுக்காக , விவசாயிகளுக்காக வந்திருக்கலாம்.
ஓட்டம் பிடித்த நடிகர்கள்
போராட்டம் நடத்த அரைநாள்தான் காவல் துறை அனுமதி கொடுத்ததாக கூறிவிட்டு கடகடவென தீர்மானங்களை படித்துவிட்டு குடும்ப விழாக்களில் சிரித்து பேசி கொள்வதுபோல் பேசிவிட்டு "மவுன விரதம்" இருந்து விட்டு 1 மணி ஆனதும் டான்னு கிளம்பி சென்றுவிட்டனர்.
மூட்டை முடிச்சுகளுடன்...
பார்ட்டி என்றால் போதும் நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி மூச்சு முட்ட குடித்துவிட்டு அதிகாலையில் போதையில் காரை ஓட்டி கொண்டே சென்று விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். அதேபோல் நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட வேண்டும் என்றால் போதும் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு மூட்டை முடிச்சுகளுடன் ஒய்யாரமாக உலா வர தெரியும் நடிகைகளுக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற தமிழ் உணர்வு இல்லாதது ஏன்.
சின்னத்திரை நடிகர், நடிகைகள்
திரையுலகினர் விழா, பார்ட்டி, திருமண நிகழ்ச்சிகள் என்றால் ஒரு சீரியலில் இஸ்திரி போடும் நபராக நடித்தவர் கூட தான் ஒரு நடிகர், நடிகை என்று கூறி கொண்டு போய் போஸ் கொடுக்க தெரிகிறது. ஆனால் இந்த போராட்டத்தில் சின்னத்துறையை சேர்ந்த பெரும்பாலான நடிகர் நடிகைகள் வரவில்லை. இவர்கள் நடிக்கும் சீரியல்களை பார்த்து விட்டு நாளை அந்த சீரியல் கதாநாயகி கேரக்டருக்கு என்னவாகுமோ என்று நாம் குரூப் டிஸ்கஷனில் ஈடுபடுகிறோம். நாம் எப்போது திருந்துவோம்.