திராவிட மொழிகளின் தாய் தமிழ்.. சிந்து சமவெளி, திராவிட நாகரீகம்தான்.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
Recommended Video
சென்னை: திராவிடத்தின் தாய்மொழியாக தமிழ் விளங்குகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, புனித பீட்டர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின அங்கமாக இயங்கவிருக்கும் "திராவிட இயல் ஆய்வு நிறுவனத்தினை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: இனமும், மொழியும் காக்கப்படுவதற்காக அண்ணா ஆற்றிய அரும்பணிகளைப் பற்றிய ஆய்வுகளை திராவிட இயல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். திராவிட மொழிகளின் தாயாக விளங்குவது தமிழ் மொழி.
திராவிட மற்ற மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தோன்றியிருக்கிறது. ஆனால் தமிழ் இலக்கியத்திற்கு 30 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட வளம் உள்ளது. எந்த மொழியின் துணை கொண்டும் இயங்காமல், தனிச் சொற்களைக் கொண்டு தனித்து இயங்கக்கூடிய ஒரு தனி மொழி தமிழ் என்பதை ஆய்வுகள் மெய்ப்பித்தன.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், இன்று (15.9.2018) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, புனித பீட்டர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின அங்கமாக இயங்கவிருக்கும் "திராவிட இயல் ஆய்வு நிறுவனத்தினை துவக்கி வைத்து விழா பேருரையாற்றினார். pic.twitter.com/rDHvOL7DLz
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 15, 2018
சிந்து சமவெளி நாகரிகமே திராவிட நாகரிகமாகும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நமது திராவிட மாநிலங்களிலுள்ள இயற்கை கொடைகளான மிகை நீரையும், மிகை மின்சாரத்தையும், உற்பத்தியாகின்ற உணவையும், ஒவ்வொரு திராவிட மாநிலங்களும், தங்களுக்குள் பகிர்ந்து உதவ வேண்டும்.
அறிஞர் அண்ணாவின் படைப்புகள் மற்றும் பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகளை மாணவர்களிடையே பரப்ப வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.