மோடியின் கவிதை நூல் விழாவில் கலந்துகொண்ட வைரமுத்துவிற்கு வலுக்கும் எதிர்ப்பு
மோடியின் கவிதை நூல் வெளியீட்டில் கலந்துகொண்ட வைரமுத்துவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது.
Recommended Video
சென்னை : மோடியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்துவிற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்த பிரதமர் மோடியின் 'சிந்தனைக் களஞ்சியம்' என்கிற மொழிபெயர்பு கவிதை மொழிபெயர்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நூலை வெளியிட கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.
இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, பிரதமர் மோடிக்கு நாட்டில் நடக்கும் பிரச்னைகளை கவிதைகளின் மூலம் தீர்த்து வைக்கும் ஆற்றல் இருக்கிறது என்றும், நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல நிமிர்ந்து நிற்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பேசியதும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
தற்போது சமூக வலைத்தளங்களில் வைரமுத்து இந்த விழாவில் கலந்துகொண்டு பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது இத்தனை பிரச்னைகள் நடந்துவரும் நிலையில் வைரமுத்து எப்படி பா.ஜ.க சார்பான விழாவில் கலந்துகொள்ளலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், தீவிர திமுக அனுதாபியும் , கருணாநிதியின் ஆதரவாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட வைரமுத்து இந்த விழாவில் கலந்துகொண்டது ஏற்புடையது அல்ல என்று ஒரு சாரரும், அவர் ஒரு கவிஞர் கவிதைக்கு மொழி, அரசியல் பாகுபாடு எல்லாம் கிடையாது அதன் அடிப்படையிலேயே கலந்துகொண்டார் என்று அவருக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.