இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் தமிழகத்தில் குமரி இணைந்திருக்காது- பொன்.ராதாவுக்கு எதிர்ப்பு
சென்னை: கேரளா இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்திருக்காது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்கக் கோரி போராட்டம் வெடித்தது. அப்பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மொழிப்போர் தியாகிகள் என கௌரவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இந்து சமயம் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்திருக்காது என்று கூறினார். இவரது பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொழிப்போர் தியாகிகள்
மொழிப்போர் தியாகிகள் சங்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறுகையில் மார்த்தாண்டம், எஸ்டிமங்காடு போன்ற இடங்களில் துப்பாக்கி சூட்டுகளுக்கும், போலீசாரின் அத்துமீறிலுக்கும் உயிரிழந்த எண்ணற்ற தியாகிகளின் உணர்ச்சி பிழம்பில் தமிழர்கள் விடுதலை பெற்றிருக்கிறார்கள்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
ஆனால் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து மக்கள் மத்தியில் மத ரீதியாக குழப்பம் விளைவிக்கும் செயல். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
தி.வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில்,"கேரளா வாழ் இந்துக்களின் ஒற்றுமையின்மையால்தான் தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்தது" என்று திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
ஏன் விடுதலை போர்?
திருவிதாங்கூர் மாகாணத்தில் இருந்த தமிழர்கள், சமூக ரீதியாக ஆண்டாண்டு காலம் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருந்தனர். அத்துடன் நாடு விடுதலை அடைந்த பின்னரும் கூட திருவிதாங்கூர் மாகாண அரசினால் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டிருந்தனர்.
வீரம் செறிந்த போராட்டம்
இந்த ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற்று தாய்த் தமிழ்நாட்டோடு இணைய வேண்டும் என்பதற்காகவே தெற்கு எல்லையான குமரி மீட்புப் போராட்டம் நடத்தப்பட்டது என்பது சரித்திரம். கன்னியாகுமரியை தாய் தமிழ்நாட்டோடு இணைப்பதற்காக 'குமரி தந்தை' மார்ஷல் நேசமணி உள்ளிட்டோர் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியதும் வரலாறு.
9 தமிழர் பலி
இந்த வராற்றுச் சிறப்புமிக்க விடுதலைப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 தமிழர்கள் தம் இன்னுயிரை ஈந்ததும் வரலாறே. இந்த வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்த மண்ணின் மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் இப்படி பேசியிருப்பது ஏற்க முடியாதது.
மத ரீதியாக அல்ல
கன்னியாகுமரி தமிழகத்துடன் இப்படித்தான் இணைந்ததே அல்லாமல் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடுவதைப் போல மதரீதியாக தாய் தமிழகத்துடன் இணைக்கப்படவில்லை. கன்னியாகுமரியை தாய் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக சாதி, மத எல்லைகளைக் கடந்துதான் அனைத்து தமிழர்களும் தமிழராய் ஒன்று திரண்டு வீரப் போராட்டம் நடத்தினர்.
மாற்றிப் பேசுவதா
தற்போது அதே மண்ணின் மக்கள் பிரதிநிதி, கேரள மண்ணில் நின்று கொண்டு, தாய்த் தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்த பெரும் போராட்ட வரலாற்றை மாற்றிப் பேசுவது ஏற்க முடியாது.
திரும்பப் பெற வேண்டும்
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் பேச்சு, குமரி மண்ணில் ஒருதாய் பிள்ளைகளாக வாழும் தமிழ் உறவுகளை மத ரீதியாக துண்டாடக் கூடியது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.
விஜயதாரணி
காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி கூறுகையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழகத்தில் குமரியை இணைக்குமாறு இந்துக்கள், கிறிஸ்வர்கள், இஸ்லாமியர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் அனைவரும் போராடி இணைத்தார்கள். ஆகவே எந்த கருத்தை கூறினாலும் மத ரீதியிலான கருத்தாக இல்லாமல் இருந்தால் நன்மையாக இருக்கும் என்றார்.
கோவை ராமகிருட்டிணன்
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன் கூறுகையில், பெருவாரியான தமிழர்கள் உள்ள குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இருப்பதுதான் நியாயம் என்று அன்று முடிவெடுக்கப்பட்டது.
துரோகம் செய்வதா?
இந்தநிலையில் குமரி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அந்த மக்களுக்கே துரோகம் செய்யும் வகையிலே குமரி மாவட்டம் கேரளத்தோடு இணைக்க வேண்டும் என்ற கருத்தை, கேரளத்தில் இன்று வைக்கப்படுகின்ற அந்த மக்களின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது கண்டனத்துக்கு உரியது.
கேரளாவுக்கு விசுவாசமா?
மேலும் தம்மை அமைச்சராக தேர்ந்தெடுத்த குமரி மக்களுக்கு விசுவாசமாக இல்லாமல், கேரளாவுக்கு விசுவாசமாக இருக்கிறார் என்றார்.
எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
பொன். ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்கக் கோரி போராட்டம் வெடித்தது.
தமிழர்களுக்கு எதிரான நிலை
கன்னியாகுமரி மக்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன், இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்திருக்காது என்று கேரளாவில் பேசியிருப்பது தமிழகத்துக்கு, தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆகும்.
தமிழினத் துரோகம்
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை உறுப்பினரான பொன். ராதாகிருஷ்ணனின் இந்த கருத்து, அவரை தேர்ந்தெடுத்த கன்னியாகுமரி பகுதி மக்களுக்கும், தமிழர்களுக்கும் செய்யும் துரோகமாகும். ஆகவே அவரின் இந்த துரோக செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
மேலும் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பொன்.இராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு நெல்லை முபாரக் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.