சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: திருமா, வேல்முருகன், கொளத்தூர் மணி, மல்லை சத்யா உள்ளிட்டோர் கைது
இலங்கை போலீசாரால் யாழ். பல்கலை. மாணவர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் தமிழ் அமைப்புகள் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.
சென்னை: யாழ்ப்பாணத்தில் இலங்கை போலீசாரால் 2 அப்பாவி தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேரை தமிழர் என்ற காரணத்துக்காக இலங்கை போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர். இப்படுகொலையைக் கண்டித்து இலங்கையில் தமிழர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகளும் இப்படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் அறிவித்திருந்தன.
சென்னை லயோலா கல்லூரியில் இருந்து இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன், மதிமுக துணை பொதுச்செயலர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டனர்.
ஆனால் தலைவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.