தமிழ் வாழ்க கோஷத்திற்கு எதிராக பாரத் மாதா கி ஜே.. பெரியாருக்கு எதிராக ஸ்ரீராம்! லோக்சபாவில் பரபரப்பு
Recommended Video
சென்னை: பெரியார் வாழ்க கோஷத்திற்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் கோஷமும், தமிழ் வாழ்க என்பதற்கு பதிலாக பாரத் மாதா கீ ஜே என்ற கோஷமும் பாஜக எம்பிக்களால் முன் வைக்கப்பட்ட சம்பவம் லோக்சபாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
17வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று லோக்சபாவில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் ஒருவர் பின் ஒருவராக இன்று வரிசையாக பதவியேற்றனர்.
சில திமுக எம்பிக்கள் பதவியேற்கும்போது, வாழ்க கலைஞர் புகழ் என்றும், ஸ்டாலினையும் வாழ்த்தி சில வார்த்தைகள் சொல்ல மறக்கவில்லை. தயாநிதி மாறன், கனிமொழி போன்றோர், பெரியார் வாழ்க என கூறியதையும் பார்க்க முடிந்தது.
தமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்
பதவிப் பிரமாணம்
தமிழக எம்பிக்கள், அனைவருமே தமிழில் உறுதிமொழி எடுத்தது மற்றொரு முக்கிய அம்சமாகும். ஆனால், இவ்வாறு தமிழ் மொழியில் தமிழக எம்பிக்கள் பதவிப் பிரமாணம் செய்ததை, வட மாநில பாஜக எம்பிக்களால் ஏற்க முடியவில்லை. தமிழக எம்பிக்கள், தமிழ் வாழ்க.. என்று கூறியபோதெல்லாம், "கியா, கியா" என ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர். அதில் ஓரளவுக்கு தமிழ் தெரிந்த ஒரு எம்பி சக எம்பியிடம் "ஜெய் தமிழ்" என்று விளக்கம் கொடுத்ததை கேட்க முடிந்தது.
பாரத் மாதா கி ஜே
இதன்பிறகு தமிழ் வாழ்க என தமிழக எம்பிக்கள் கூறியபோது, சில பாஜக எம்பிக்கள், "பாரத் மாதா கீ ஜே" என பதிலுக்கு கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் வாழ்க என்று கூறும்போதெல்லாம், நக்கல் கலந்த சிரிப்பை, பாஜக எம்பிக்கள் சிலர் உதிர்த்ததையும் பார்க்க முடிந்தது. சிலர் சத்தம் போட்டு ஹிந்தியில் பேசி, அதற்கு இடையூறு செய்ய முற்பட்டனர்.
பெரியார் vs ஜெய் ஸ்ரீ ராம்
திமுக எம்பி கனிமொழி பதவிப் பிரமாணம் செய்த பிறகு, "பெரியார் வாழ்க" என்று கூறினார். இதைக்கேட்டதும், அதிர்ச்சியடைந்த பாஜ எம்பிக்கள், "ஜெய் ஸ்ரீராம்" என்று பதிலுக்கு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர். ராமர் வழிபாட்டையும் எதிர்த்தவர். எனவே, பெரியார் வாழ்க என்ற கோஷம், கண்டிப்பாக பாஜக எம்பிக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். இருப்பினும், அடுத்தவர் உணர்வை மதித்து, எதிர்கோஷம் போடுவதை தவிர்த்திருக்க வேண்டும்.
ஏன் இந்த கோபம்
அதேநேரம், தமிழ் வாழ்க என்று சொன்னாலுமா, கோபப்படுவது? தமிழ் வாழ்க என சொல்பவர்கள் என்ன தனிநாடா கேட்கப்போகிறார்கள். தங்கள் தாய் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் தமிழர்கள். அவர்கள் அதை வெளிப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆஸ்கர் விருது வாங்கும்போது கூட, "எல்லா புகழும் இறைவனுக்கே" என கூறினாரே இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான். எந்த மதம், எந்த ஜாதியாக இருந்தாலும், தமிழர்கள் தமிழை முதலில் தூக்கி வைத்து கொண்டாடுவது வழக்கம்தான். ஆனால் நாட்டின் பன்முகத்தன்மையை இன்னும் பாஜகவால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையே இந்த கோஷங்கள் காட்டுகின்றன.