தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி திடீர் ராஜினாமா!
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முத்துக்குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முத்துக்குமராசாமி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.எல். சோமையாஜி ராஜினாமா செய்ததை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய தலைமை வழக்கறிஞராக ஆர். முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டார்.
2013-ஆம் ஆண்டில் நவநீதகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஏ.எல். சோமையாஜி நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்குப் பதிலாக புதிய தலைமை வழக்கறிஞராக ஆர். முத்துக்குமாரசாமியை தலைமை வழக்கறிஞராக நியமித்தார் ஆளுநர்.
இந்த நிலையில் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் முத்துக்குமாரசாமி. உடல்நிலை குறைவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தன்னை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முத்துக்குமாரசாமியின் ராஜினாமா சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அடுத்த தலைமை வழக்கறிஞர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைமை வழக்கறிஞராக விஜயநாராயணன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.