பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை கூடியது! பட்ஜெட் குறித்து விவாதம்
Recommended Video
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூடியுள்ளது. .இதில் பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிஏஏ பிரச்சனைக்கு எதிரான போராட்டங்கள் , டிஎன்பிஎஸ்சி முறைகேடு உள்பட பல்வேறு விவகாரங்களை பற்றி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழக அரசின் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது பிப்ரவரி 14ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அவர் நிதி நிலை அறிக்கையை வாசித்த முடித்த பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. அதன்பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரில் நான்கு நாளில் முடிக்க திட்டமிட்டுள்தாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.. அதன்பின்னர் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இந்த நிதி நிலை அறிக்கையில் மிகஅதிகபட்சமாக பள்ளிகல்வித்துறைக்கு 31, 181 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு ரூ.11894.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6754 கோடியும், நகராட்சி நிர்வாகத்துகு 18540 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் ரூ.4லட்சத்து 56000 கோடியாக உயர்ந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில், இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டமிட்டுள்ளன.இதேபோல் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண மண்டலமாக மாற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன. மேலும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தையும் எழுப்ப முடிவு செய்துள்ளன. இதனால் சட்டசபையில் இன்று பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.