சட்டசபை: ''ஊழல் வழக்கில் குற்றவாளியாக இருக்கும் ஒருவர் வழிநடத்தும் அரசு நமக்கு தேவையா?''
சென்னை: ஊழல் வழக்கில் குற்றவாளியாக இருக்கும் ஒருவர் வழிநடத்தும், அரசு நமக்குத் தேவையா? என்று தேமுதிக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்வர் பன்னீர்செல்வம், முதல்வருக்கான இருக்கையில் அமரவில்லை. அவர் நிதியமைச்சராக இருந்தபோது அமர்ந்த இடத்திலேயே அமர்ந்தார்.
அவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
குற்றவாளியை புகழும் மன்றமாகிவிட்டது...
அவையில் இருந்து வெளிநடப்புச் செய்த பின்னர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுப்பதோ அல்லது தமிழக மக்களின் நலன்களுக்காக பாடுபடுவதோ அ.தி.மு.க. அரசின் நோக்கமல்ல. மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் சட்டமன்றத்திற்குச் சென்றோம். சட்டமன்றத்திற்குள் விவாதிக்க எங்களை அனுமதிக்கவில்லை. புனிதமிக்க தமிழக சட்டமன்றத்திற்குள் சிறைத் தண்டனை பெற்ற தங்கள் தலைவரைப் புகழ்வதிலேயே அமைச்சர்களும், முதலமைச்சரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தலைவர் கலைஞர் காலத்தில் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாகத் திகழ்ந்த சட்டமன்றம் இப்போது சிறைத் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை புகழும் மன்றமாக மாறிவிட்டது.
நீதித்துறையை சிறுமைப்படுத்தி, சட்டமன்றத்தின் மாண்பினையும், புனிதத்தையும் சிதைத்து, தமிழக மக்களை அவமாரியாதை செய்த அ.தி.மு.க. அரசின் இன்றைய நாள் வெட்கப்பட வேண்டிய நாள் என்றார்.
அரசு நமக்குத் தேவையா?...
தேமுதிக உறுப்பினர் மோகன் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவையில் அமைச்சர்கள், உறுப்பினர்கள் பேசும்போது ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் நடைபெறும் தமிழக அரசு என குறிப்பிட்டு பேசுகிறார்கள். ஊழல் வழக்கில் குற்றவாளியாக இருக்கும் ஒருவர் வழிநடத்தும், அரசு நமக்குத் தேவையா? என்றார்.
முன்னதாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சட்டசபையில் பேச முயற்சித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகர் தனபாலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பேச முயன்றனர். எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று பேச முயற்சிப்பதை பார்த்த சபாநாயகர் ப.தனபால், அனைவரையும் இருக்கையில் அமரும்படி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள், மக்கள் பிரச்சினைகள் பற்றி பேச பேரவை கூட்ட நாட்களை அதிகப்படுத்துக என்ற வாசகம் அடங்கிய காகிதத்தை கையில் பிடித்தபடி எழுந்து நின்றனர். இதை எதிர்த்து அதிமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டனர்.
இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதம்:
சபாநாயகர் ப.தனபால்: அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்ட விஷயங்களை பேரவையில் பேசக் கூடாது. நீங்கள் செய்வதில் நியாயம் இல்லை. கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு (துண்டு காகிதம் வைத்ததை குறிப்பிட்டு) செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன்: சபாநாயகரின் பேச்சுக்கு மதிப்பளித்து அமருங்கள்.
தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன்: சபாநாயகரின் ஆணைக்கு கட்டுப்படுகிறோம். நேற்றைய அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில்....
சபாநாயகர் ப.தனபால் (குறுக்கிட்டு): அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் விரிவாக பேசிய விஷயங்களை இங்கு வந்து மீண்டும் பேசுவது முறையல்ல. அனைவரும் இருக்கையில் அமருங்கள்.
அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன்: அவை விதிகளுக்கு புறம்பாக அலுவல் ஆய்வு குழுவில் பேசியதை இங்கே பேச வேண்டாம். மற்ற பிரச்சனைகள் இருந்தால் அதுகுறித்து பேசுங்கள்.
அப்போது தே.மு.தி.க. உறுப்பினர் மோகன்ராஜ் எழுந்து பேச முயன்றார்.
சபாநாயகர் ப.தனபால்: மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கான வாய்ப்பை நீங்களே தடுக்கிறீர்கள். மற்ற பிரச்சினை பற்றி பேசுங்கள்.
தொடர்ந்து தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் எழுந்து நின்று பேச முயன்றனர். ஆனால், சபாநாயகர் ப.தனபால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுவது குறித்து பேசினார்
சபாநாயகர் ப.தனபால்: 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகள் குறித்து பேச தி.மு.க., தே.மு.தி.க. உறுப்பினர்களில் ஒருவர், புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசலாம்.
அந்த நேரத்தில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் பற்றி பேச அனுமதி மறுத்ததால், தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் உறுப்பினர்களும், புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தனர்.