மருத்துவ படிப்பிற்கு நீட் வேண்டாம்.. தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல்
சென்னை: மருத்துவப் படிப்பிற்கு அகில இந்திய அளவில் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தத் தேர்வை எழுதாமல் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேரும் வகையில் இன்று சட்டப்பேரவையில் சட்ட முன் வடிவை சுகாதாரத் துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.
மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக 'நீட்' எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்த்தன. இந்தத் தேர்வு தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்று வாதிடப்பட்டது. என்றாலும் மத்திய அரசு நீட் தேர்வில் உறுதியாக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் அதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் வலியுறுத்தி இருந்தார்.
இதனையடுத்து, நீட் தேர்வு இல்லாமல் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.
நீட் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் இந்த சட்ட முன் வடிவு சட்டமாகும் போது, மூலம் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற வழிவகை ஏற்படும்.