பரபரப்பான சூழலில் கூடியது தமிழக சட்டசபை! 24 நாட்களுக்கும் அனல் பறக்கும்!!
பரபரப்பான எதிர்பார்ப்புக்கு இடையே இன்று சட்டசபை கூடுகிறது. 24 நாட்களுக்கு சட்டசபை நடைபெறும்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபைக்கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியில் பல அணி இருக்கிறது. யார் எப்படி எந்தப்பக்கம் பாய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே சட்டசபைக்கு வந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சட்டசபை கூடிய உடனேயே மறைந்த 6 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் எம்.பி செழியனுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
சட்டசபை கூடினாலே ஜெயலலிதாவின் 110 அறிவிப்புகளுக்கு பஞ்சமிருக்காது. அவரது மரணத்திற்கு பிறகு நடைபெறும் முதல் பட்ஜெட் மானியக்கோரிக்கை விவாதக் கூட்டம் என்பதால் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத் தொடர் ஜூலை 19ஆம் தேதி வரை நடக்கிறது. 24 நாட்களுக்கு அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
எம்எல்ஏக்கள் கூட்டம்
சட்டசபை என்றாலே ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர் மல்லுக்கட்டும் சபை என்றாகி விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்தவைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் பண பேரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ள நிலையில் சட்டசபை கூடுவதால் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
யாரையும் விடாதீங்க
அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு இரண்டுமே அதிமுக உறுப்பினர்களுக்குக் கோடிகளைக் கொடுத்திருப்பது தெளிவாகிறது. எனவே, நாம் இரு அணியையும் சேர்த்தே தாக்குவதாக இருக்க வேண்டும் என்று கூறினாராம்.
ஸ்டாலின் அட்வைஸ்
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையில் நடந்ததுபோல சபாநாயகரின் இருக்கையில் அமர்வது போன்ற செயல்களை இந்த முறை எந்த உறுப்பினரும் செய்துவிடக் கூடாது.
கடைசி கூட்டத் தொடர்
அதிமுக அரசின் கடைசி சட்டசபை தொடராக இருந்தாலும் இருக்கலாம். எனவே நாகரிகத்துடன் நடந்துகொள்ளுங்கள். ஒரு சிறு கீறலும் திமுக உறுப்பினர்களால் ஏற்பட்டுவிடக் கூடாது. துறைரீதியான கேள்விகளால் ஆளுங்கட்சி திணற வேண்டும் என்று அட்வைஸ் செய்திருக்கிறாராம்.
பிரச்சினைகளை பேசுவோம்
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி எம்எல்ஏ, நாங்கள் மக்கள் பிரச்சினைகளை சபையில் எழுப்புவோம். குடிநீர் பிரச்சினை, வறட்சி, விவசாயிகள் பிரச்சினையை பேசுவோம் என்று கூறியுள்ளார்.
முதல்வரின் ஆலோசனை
சட்டசபையில் நிறைவேற்றப்படவுள்ள மானியக் கோரிக்கைகள், ஜி.எஸ்.டி. மசோதா, புதிய திட்டங்கள் பற்றி நேற்று அமைச்சசரவை கூட்டத்தில் விவாதித்தாராம் முதல்வர். திமுக என்ன செய்தாலும் அமைதியாக இருங்கள் என்பதே முதல்வரின் அறிவுரையாக இருந்ததாம்.
அரசின் பக்கம் பேச வேண்டும்
எம்எல்ஏக்கள் எந்த அணி உணர்வில் இருந்தாலும், அவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லுங்கள். பழனிசாமி முதல்வராக இருந்தால்தான் அவர்கள் எல்லாம் எம்எல்ஏவாக இருக்க முடியும். இல்லையென்றால் தேர்தல்தான். மானியக்கோரிக்கை மீதான வாக்கெடுப்புகளில் அரசின் பக்கம் அனைவரும் நிற்க வேண்டும் என்று எம்எல்ஏக்களிடம் பேசுங்கள் என்று அமைச்சர்களிடம் கூறியிருக்கிறாராம்.
நம்பிக்கை வார்த்தைகள்
ஒவ்வொரு அமைச்சரும் தங்களின் மாவட்டங்களில் உள்ள எம்எல்ஏக்களிடம் பேசினார்களாம். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி அணியில்தான் இருப்பார்கள் என்பது போலவே தகவல்கள் முதல்வருக்கு சென்று சேர்ந்துள்ளன. இதனால் சற்றே நம்பிக்கையாக சட்டசபைக்குள் அடியெடுத்து வைப்பார் எடப்பாடி பழனிச்சாமி.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை
சட்டசபையில் எதிர்கட்சியினர் அதிகம் எழுப்புவது சட்டம் ஒழுங்கு பிரச்சினைதான். இந்த 6 மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை பற்றி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கணக்கெடுத்து வைத்திருக்கிறாராம். இதை அறிந்த முதல்வரும் அரசு சார்பில் தனியாக கணக்கெடுக்க சொன்னாராம்.
உளவுத்துறை ரிப்போர்ட்
டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து மாவட்ட உளவுத்துறை அதிகாரிகளுக்கு அவசமாக போன் போட்டு அறிக்கை கேட்டார்களாம். மாவட்டத்தில் ஆணவக் கொலைகள், கூலிப்படைகள், கூலிப்படைகளால் கொல்லப்பட்டவர்கள் பற்றி உடனடியாக பட்டியல் தயாரித்து அனுப்பியிருக்கிறார்களாம்.
ஓபிஎஸ் அணி
இந்த இரு வியூகங்களுக்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டிய ஓபிஎஸ், யார் யார் என்ன பேசுவது என்று அறிவுறுத்தியிருக்கிறாராம். அந்த அணியினர் அரசின் பக்கம் நிற்பார்களா? எதிர்கட்சிகள் போல எதிர்த்து பேசி சண்டை போடுவார்களா என்பது தெரியவரும்.
ஜிஎஸ்டி மசோதா
ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த உள்ளது. தமிழக அரசு சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதாவை இன்று அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
24 நாட்கள் கூட்டத் தொடர்
இன்று கூடும் சட்டசபை 24 நாட்கள் நடக்கிறது. 24 நாட்களும் மானியக்கோரிக்கை விவாதம், மசோதாக்கள், எதிர்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானம், வெட்டுத்தீர்மானம் பற்றியும் விவாதம் நடைபெறும். அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கலாம். ஆனால் வெளிநடப்புகள், வெளியேற்றங்கள் இல்லாமல் அவை சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். நடக்குமா?