EXCLUSIVE: 5 வருஷமா சொல்லிட்டிருந்தேன்.. தமிழக அரசு செவி சாய்த்து விட்டது.. சு.வெங்கடேசன் மகிழ்ச்சி
அதிமுக பட்ஜெட் அறிவிப்புக்கு எம்பி சு.வெங்கடேசன் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "5 வருடமாக சொல்லி கொண்டிருந்த என் கோரிக்கைக்கு இன்று தமிழக அரசு செவிசாய்த்து.. தொல்லியல் துறைக்கு 12 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது.. வரவேற்கத்தக்கது.. தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது இதுவே முதல்முறை... கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம் என்றே கூறலாம்.." என்று எம்பி வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் சென்னையில் 43-வது புத்தகக் கண்காட்சி நடந்தது... அதில், நாள்தோறும் ஒரு தலைப்பில் எழுத்தாளர்கள் பேசினர்... அந்த வகையில் கீழடி ஈரடி என்ற தலைப்பில் மதுரை எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசனும் பேச அழைக்கப்பட்டிருந்தார்.
அப்போது, மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், பபாசியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்ற மறுத்து கண்டனம் தெரிவித்தார். அண்ணல் அம்பேத்கர் குறித்த எடப்பாடி பழனிசாமியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கும் கண்டனமும் தெரிவித்திருந்தார்.
சு.வெங்கடேசன்
ஆளும் தரப்பு மீது இப்படி கருத்து மோதல்கள் பல இருப்பினும், நல்ல விஷயம் என்று வந்துவிட்டால் அதை முதலில் வந்து பாராட்டவும் செய்வார் சு.வெங்கடேசன்.. திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன், அதிமுகவின் பட்ஜெட் குறித்த ஒரு அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்குதான் வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
அகழ்வைப்பகம்
தமிழக அரசின் 2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், தொல்லியல் துறைக்காக 31.93 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் இன்று அவையில் அறிவித்தார்.
நினைவூட்டல்கள்
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கடந்த 5 வருஷங்களாக விடாமல், கோரிக்கை விடுத்தபடியே இருந்தது வெங்கடேசன்தான்.. பலரும் மறந்த கீழடியை அடிக்கடி தட்டி எழுப்பி வீர்யமிகு வரிகளால் நினைவூட்டியபடியே இருந்தார்.. கீழடியை மையப்படுத்தியே, 'வைகை நதி நாகரிகம் ', 'கீழடி' என இரண்டு நூல்களை எழுதியுள்ளார். வெகுஜன மக்கள் மத்தியில் இவரது எழுத்துகள்தான் கீழடி தொடர்பான தகவல்களைப் பரவலாகக் கொண்டுபோய் சேர்த்தது என்பதை சற்று உரக்கவே குரல் எழுப்பி சொல்லலாம்.
நிதி ஒதுக்கீடு
இந்த நிலையில், இது தொடர்பான அறிவிப்பு வெளியானதும், "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக எம்பி சு.வெங்கடேசனை தொடர்பு கொண்டு பேசினோம். பேரவையின் அறிவிப்பு குறித்த கருத்தையும் கேட்டோம்.. அப்போது அவர் சொன்ன பதில் இதுதான்: "நான் 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தேன். இதனையேற்று, கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே தமிழக முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்... இப்போது பட்ஜெட்டில் அதற்கும் வடிவம் கொடுக்கப்பட்டு ரூ.12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொல்லியல் மரபுகள்
இது பாராட்ட வேண்டிய விஷயம்.. இரண்டு காரணங்களுக்காக இதை நான் வரவேற்கிறேன். ஒன்று இந்தியாவிலேயே தமிழகம் என்பது மானுடவியல், தொல்லியலின் கலைக் களஞ்சியமாக விளங்கும் செழிப்பான ஒரு பகுதி... இதனுடைய தொல்லியல் மரபுகள், மானுவியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் .. அவற்றின் ஒரு பகுதியாக தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மிக முக்கியமான ஒரு விஷயம்.. இரண்டாவது, கீழடி தமிழ் வரலாற்றுக்கு கிடைத்திருக்ககூடிய மிக முக்கியமான சான்று.
இதுவே முதல்முறை
அதை உலக மக்கள் முழுவதும் காட்சிப்படுத்துவதற்கான ஒரு அருங்காட்சியகம் அமைப்பது என்பது முக்கியமானது.. இதை நான் 5 வருடமாக சொல்லி கொண்டே இருந்தேன்.. இந்த கோரிக்கைக்கு இன்று தமிழக அரசு செவிசாய்த்து, அருங்காட்சியகம் தேவை என்பதை உணர்ந்து தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்காக தமிழக முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது இதுவே முதல்முறை. கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம் என்றே கூறலாம்" என்றார் எம்பி வெங்கடேசன்.
அரசியல் நாகரீகம்
காலங்காலமாக பட்ஜெட் தாக்கல் என்றாலே, ஆளும் தரப்பு கூட்டணிகள் அதை வரவேற்பதும், எதிர்தர்தரப்பு கூட்டணிகள் அந்த பட்ஜெட்டை விமர்சித்து குறைகூறுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கும்.. ஆனால், ஆயிரம் கருத்து மோதல்கள் கட்சிகளுக்குள் இருப்பினும், நல்ல அறிவிப்பு என்றால் அதை இப்படி மனசு விட்டு பாராட்டுவதை கவனிக்கும்போது, அரசியல் நாகரீம் இன்னும் மக்கி போய்விடவில்லை.. அது மீண்டும் தழைத்து.. எங்கோ ஒரு இடத்தில்.. ஏதாவது ஒரு ரூபத்தில்.. துளிர்த்து கொண்டுதான் இருக்கும் என்ற நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நமக்கு ஏற்படுகிறது!!