தமிழகம் முழுவதும் தடையை மீறி தொடரும் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் - மக்கள் அவதி
தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடர்கிறது.
சென்னை: உயர்நீதிமன்ற தடையை மீறி ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் 3வது நாளாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிற்சங்கங்கள் 2.57 மடங்கு சம்பள உயர்வு கோரிக்கை வைத்தனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். சுமார் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மக்கள் அவதி
வேலைக்குச் சென்றவர்கள், பள்ளிக்குழந்தைகள், மாணவ, மாணவிகள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். தனியார் பேருந்துகளைக் கொண்டு கட்டணமின்றி இயக்கி வருகின்றனர். தற்காலிக பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை பஸ் சேதம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுவதால் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில் தண்டையார்பேட்டை- எண்ணூர் நெடுஞ்சாலையில் 44 சி பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆர்.கே நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலை நிறுத்தம் நீடிப்பு
சிவகங்கையில் குறைந்தளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. காரைக்குடியில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. ஈரோட்டில் போக்குவரத்துக்கு ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக குறைவான பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பயணிகள் பாதிப்பு
கிருஷ்ணகிரி பணிமனையில் இருந்து 3 பேருந்துகளும், புறநகர் பணிமனையின் 70 பேருந்துகளில் 2 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 50% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
தடையை மீறி போராட்டம்
பணிக்கு திரும்பாத போக்குவரத்து தொழிலாளர்கள் சஸ்பெண்ட், டிஸ்மிஸ் மற்றும் குற்ற வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு ஆகிய விளைவுகளை தாங்களே எதிர்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் சிஐடியு, ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தொடரும் போராட்டம்
இதற்கு பதிலளித்த தொழிற்சங்க நிர்வாகிகள், போராட்டம் என்றால் நடவடிக்கை இருக்கும். அந்த நடவடிக்கைக்கு நாங்கள் சற்றும் கவலைப்பட போவதில்லை. போராட்டத்தை கைவிடுமாறு நீதிமன்ற உத்தரவு இதுவரை எங்களுக்கு வரவில்லை. நீதிமன்ற உத்தரவை பார்த்த பிறகு தான் எங்களால் கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறியுள்ளனர். வரும் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் எங்களது கருத்தை நாங்கள் முன்வைப்போம். இதுவரை எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பாதிப்பு
போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் பணி நீக்கம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நீதிமன்றமும், அரசும் எச்சரித்த பின்னரும் போராட்டம் 3வது நாளாக நீடிப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.