தமிழகம் முழுவதும் களை கட்டிய தை பொங்கல்: வெளிநாட்டினரும் உற்சாகம்
சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற சொல்லுக்கு ஏற்ப இந்த தை திரு நாளில் இருந்து தங்களுக்கான நல் வழிகள் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு நேற்று அதிகாலையிலேயே எழுந்து வண்ண வண்ண கோலமிட்டு வரவேற்றனர்.
வாசலில் பொங்கல் வைத்து
புத்தாடை அணிந்து கொண்டு புதுப்பானையில் மஞ்சள் கொத்து சுற்றி பொங்கலிட்டனர். பொங்கிவரும் போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பினர். பின்னர் வாழையிழையில் பொங்கலுடன், மஞ்சள், கரும்பு, காய் கறிகள் கொண்டு படையலிட்டு, சூரியனை வணங்கி மக்கள் வழிபட்டனர். கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
வெளிநாட்டினர் பங்கேற்பு
தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா, ஜெர்மன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் திரளாகப் பங்கேற்றனர்.
கரகாட்டம் ஆடி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நடைபெற்ற பொங்கல் பண்டிகையில் ஏராளமான வெளிநாட்டினர் பங்கேற்றனர். கரகாட்டம் ஆடியும், உருமி மேளம், தப்பு உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசித்தும் உற்சாகமாக பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.
யானைகள் முகாமில்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் யானைகள் நல வாழ்வு முகாமில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. முகாமில் பங்கேற்றுள்ள 30 யானைகளும், அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிற்க வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து யானை லட்சுமி மணியடிக்க, புதுபானையில் புத்தரியிட்டு பொங்கல் வைக்கப்பட்டது.
பொங்கல் பொங்கிய போது முகாமில் கூடியிருந்த யானைகள் பிளிறி அவற்றின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. யானைகளுக்கு பொங்கல், அவல், பழம் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டன. யானை பாகன்களுக்கு, அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் புத்தாடை வழங்கினர்
கசந்த கரும்பு விலை
பொங்கல் பண்டிகையை யொட்டி, கரும்பு,மஞ்சள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை நேற்று களைகட்டியிருந்தது. சென்னை மற்றும் கோவையில் ஒரு ஜோடி கரும்பு, 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் கரும்பு விளையும் பகுதியான கடலுாரிலும், ஒரு ஜோடி 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
பூஜைக்கு கரும்பு
இதனால், பண்டிகைக்காக ஆர்வமுடன் கரும்பு வாங்க சென்ற மக்கள், விலையை கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தனர். கரும்பும் ருசி குறைவாகவும், சிறுத்தும் காணப்பட்டதால் வேறு வழியின்றி பூஜைக்கு அவற்றை வாங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர்.
சென்னையில் பொங்கல்
சென்னையில் குக்கரில் பொங்கல்வைத்து வீட்டு பூஜையறைகளில் படையலிட்டு மக்கள் கொண்டாடினர். வணிகவளாகங்களில் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.