வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு:தலைமைத்தேர்தல் அதிகாரி
சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக மனுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2016-ம் ஆண்டு தேர்தலுக்கான வாக்காளர் திருத்த வரைவுப் பட்டியல் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி வெளியிடப்பட்டது. சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான மனுக்கள் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் கடந்த அக்டோபர் 24-ந்தேதி வரை பெறப்பட்டன. பெறப்பட்ட படிவங்கள் மாவட்ட அளவில் பரிசீலிக்கப்பட்டன. மனுதாரர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த திருத்தத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தார்கள். பெறப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. வாக்குச்சாவடி அதிகாரிகள், படிவங்களை சரிபார்த்து வருகிறார்கள். வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மனுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மனுதாரர்கள் தங்களது படிவம் எந்த நிலையில் உள்ளது என்பதை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் கண்டறிந்து கொள்ளலாம். மொபைல் எண்களை கொடுத்துள்ள மனுதாரர்களுக்கு அவ்வப்போது எஸ்எம்எஸ் வாயிலாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.