பொங்கல் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு..கரும்பை காணோம் என குற்றம் சாட்டும் நெல்லை மக்கள் !
நெல்லை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களில் முறைகேடு நடப்பதாக நெல்லை மாநகர மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, 2 அடி கரும்பு, ரூ.100 ஆகியவற்றை வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் உத்தரவின் பேரில் அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை பெற பலர் முட்டி மோதி வருகின்றனர். ஆனால் பல இடங்களில் இந்த பொருட்கள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
நெல்லை மாநகரி்ல் சில கடைகளில் கரும்பை தவிர மற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் கரும்பின் அளவை குறைத்து வழங்குவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் இரண்டு அடி கரும்புக்கு பதில் அரை அடி கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது.
ஒரு கரும்பை 5, 6 துண்டுகளாக வெட்டி வினியோகம் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரேசன் கடை ஊழியர்களுடன் தகராறு செய்தனர். கரும்புகளை வெட்டி தர ஆளில்லை என ரேசன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த குளறுபடியால் பல இடங்களில் பொதுமக்களுக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.