மேட்டூர் அணை அக். 2ல் திறப்பு - தமிழக முதல்வர் அறிவிப்பு
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை அக்டோபர் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை அக்டோபர் 2ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் கனமழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்றைய தினம் 21,648 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 33,569 கன அடியாக உயர்ந்தது.
41 ஆயிரம் கன அடி நீர்
அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 41 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டமும் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 87 அடியை தாண்டியுள்ளது.
அணை நீர் மட்டம் உயரும்
அணைக்கு தொடர்ந்து அதிகளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், இன்றிரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூரிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா விவசாயிகள்
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நீர்இருப்பு 49.39 டி.எம்.சி ஆக உள்ளது. இந்நிலையில், 13.10 லட்சம் ஏக்கரில், சம்பா சாகுபடியை துவங்க, மேட்டூர் அணையில் நீர் திறக்க வேண்டும் என, டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
டெல்டா மாவட்ட விவசாயிகள்
இதனையேற்று அக்டோபர் 2ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்ட சாகுபடி
கடந்த 2015ஆம் ஆண்டு டெல்டா சாகுபடிக்கு, ஆகஸ்ட் 9ல் நீர் திறக்கப்பட்டது. அதற்கேற்ப வடகிழக்கு பருவ மழையும் கைகொடுத்ததால், டெல்டாவில் சம்பா சாகுபடிக்கு தடையின்றி நீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
குறுவை சாகுபடி
நடப்பாண்டு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை அக்டோபர் 2ஆம் தேதி திறக்கப்படுகிறது. வழக்கமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாகவே குறுவை சாகுபடி பொய்த்துப்போய்விட்டது குறிப்பிடத்தக்கது.