மாதந்தோறும் 65,140கி.லி மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்... மோடிக்கு ஜெ. கடிதம்!
சென்னை: தமிழகத்துக்கு உரிய அளவு மண்ணெண்ணெய் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் மண்ணெண்ணெய் அளவைக் குறைத்து வருகிறது. இதனால், கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே தமிழகத்திற்கு மாதந்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-
தேவை...
தமிழகத்தில் பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக வினியோகிக்க மாதந்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால், முந்தைய ஆட்சியின் போது 2010 மார்ச் வரை, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தமிழகத்திற்கு 59,780 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்தது.
மிகக் குறைவான அளவு...
அதன்பின்னர், தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த அளவும் 10 முறைகளில் படிப்படியாக குறைக்கப்பட்டு விட்டது. தற்போது தமிழகத்திற்கு தேவைப்படும் அளவை விட மிகக்குறைவாக வெறும் 29,056 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.
45 சதவீதம் தான்...
இது தமிழகத்தின் மொத்த தேவையில் வெறும் 45 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனவே, 55 சதவீதம் பற்றாக்குறை நிலவுகிறது.
பெட்ரோலிய அமைச்சகம்...
மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதை அடிப்படையாகக் கொண்டு, மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்தது.
மண்ணெண்ணெய் பயன்பாடு குறையவில்லை...
பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 56.16 லட்சம் கேஸ் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புள்ளிவிவரம் உறுதி செய்யப்படாத ஒன்று. மேலும், நாடு முழுவதும் கேஸ் இணைப்புகள் அதிகரித்து வந்தாலும், மண்ணெண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரத்திலும் தெரிவிக்கப்படவில்லை.
முறையற்ற செயல்...
அதே போல், சில மாநிலங்களுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, கேஸ் இணைப்புக்கு ஏற்ப குறைக்கப்படவும் இல்லை. அதே நேரத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய்யின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இது முறையற்றது.
ஏமாற்றம்...
முந்தைய அரசால் குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை புதிய அரசு அதிகரிக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த 1ம் தேதி, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் மீண்டும் 29,060 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராம மக்கள் பாதிப்பு...
மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்ததால் கடந்த 3 ஆண்டுகளாக கிராமப்புற மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தின் தேவையை கருத்தில் கொண்டு, மாதந்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.