கணினி அறிவியல் படித்த பட்டதாரிகளுக்கு பள்ளிகளில் முன்னுரிமை கொடுங்கள் - துணைமுதல்வரிடம் மனு
தமிழகத் துணை முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
சென்னை: கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியை 3 முதல் 10 வகுப்பு வரை கொண்டு வருவதாக அரசின் கொள்கை முடிவில் கூறப்பட்டுள்ளதற்கு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரை கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
முக்கிய கோரிக்கைகள்
1) அண்டை மாநிலங்களில் உள்ளது போல், அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆறாவது கட்டாயப் பாடமாக பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
2) புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
3) கணினி இன்றியமையாத இன்றைய சூழலில் தொடக்க (1-5), நடுநிலை (6-8), உயர்நிலை (9-10), மேல்நிலை (11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஒரு பி.எட். படித்த கணினி ஆசிரியரை தமிழக அரசு நியமனம் செய்திட வேண்டும்.
அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால், தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவதுடன், கணினி அறிவியலில் பி.எட்., பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவர்.
கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக நீண்ட வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் எங்களுடைய வாழ்வாதாரக் கோரிக்கைகளை தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.