கடனில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற.. பாமக சொல்லும் பத்து யோசனைகள்!
நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.3,34,433 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.2,93,186 கோடியாகவும் இருக்கும் என்கிறது பாமக நிழல் அறிக்கை.
சென்னை: கடன் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற பாமக நிழல் அறிக்கையில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாட்டுக்கான பொது பட்ஜெட் நிழல் அறிக்கை கடந்த 15 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது.
2017- 2018ம் ஆண்டின் பொது பட்ஜெட் நிழல் அறிக்கையை கடந்த ராமதாஸ், மற்றும் அன்புமணி ஆகியோர் வெளியிட்டார்கள். அதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படவும், நிதி நிலைமையை சிறப்பாக பராமரிக்கவும், கூறியுள்ள 131 ஆலோசனைகளில் சிறப்பான 10 யோசனைகள் இவைதான்:
வருவாய்
தமிழ்நாட்டின் வருவாய் நடப்பு நிதியாண்டில், ரூ.3,29,712 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டில் மொத்த வருவாயை விட ரூ.1,25,908 கோடி அதிகமாகும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலமும், வணிக வரி வசூலை மேம்படுத்துவதன் மூலமும் ரூ.1,05,000 கோடி கூடுதல் வருவாய் பெற முடியும்.
கடன் அடைப்பு
நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.3,34,433 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.2,93,186 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.45,000 கோடி, நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் அடைக்கப்படும்.
நிதிப்பற்றாக்குறை
நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.36,526 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.4,721 கோடி. வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.
நிர்வாக சீர்திருத்தம்
தமிழக அரசு நிர்வாகக் கட்டமைப்பை நிகழ்காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் நிர்வாக சீர்திருத்த ஆணையம் அமைக்கப்படும்.
வளர்ச்சி குறைவு
தமிழக அரசின் வருவாய் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் பெருமளவில் குறைந்திருக்கிறது. 2013-14 முதல் நடப்பு நிதியாண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் எதிர்பார்க்கப்பட்டதைவிட, 67,000 கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்திருக்கிறது.
மது விற்பனை மட்டுமே
மது விற்பனை மூலம் கிடைக்கும் கலால் வருவாயைத் தவிர பிற வருவாய் இனங்கள் எதிலும் கடந்த 5 ஆண்டுகளில் இலக்கை எட்ட முடியவில்லை. தமிழக அரசின் வரி வசூல் கட்டமைப்பில் நிலவும் குளறுபடிகள், ஊழல்கள் ஆகியவற்றைக் களைந்து அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்க பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்படும்.
அம்மால்லாம் சும்மா
தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சரின் பெயரைக் குறிக்கும் வகையில் நடைமுறையில் உள்ள 'அம்மா' திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அரசுத் திட்டங்களாக செயல்படுத்தப்படும். இனி வரும் காலங்களில் அறிவிக்கப்படும் எந்தத் திட்டமும் தனி மனிதர்களின் பெயரால் அழைக்கப்படாது. அரசுத் திட்டங்கள் என்றே அழைக்கப்படும்.
ஊழல்
தமிழ்நாட்டில் தேர்தல் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு முடிவுகட்டுவதற்கு வசதியாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யும்படி மத்திய அரசையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் நேரில் சந்தித்து வலியுறுத்த முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்களை மே மாதம் 2வது வாரத்தில் நடத்த வசதியாக ஏப்ரல் முதல் வாரத்துக்குள் தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் முடிக்கப்படும். இப்பணிகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவையெல்லாம் பாமக நிழல் பட்ஜெட் அறிக்கையின் முக்கிய அம்சங்களாகும்.