டெங்கு, சிக்குன்குனியாவிற்கு 47 பேர் பலி... சொல்வது தமிழக அரசு
தமிழகத்தில் தற்போது வரை டெங்கு மற்றும் மற்ற காய்ச்சலால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பல மரணங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன.
டெங்குவிற்கு 15 பேரும் சிக்குன்குனியாவிற்கு 32 பேரும் என மொத்தம் 47 பேர் மட்டுமே காய்ச்சலுக்கு உயிரிழந்திருப்பதாக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புள்ளிவிபரம் ஒன்றை கூறியுள்ளது.
டெங்கு காய்ச்சல் ஒருவகை வைரசால் ஏற்படுகிறது. டெங்கு வைரஸ்களில் 4 வகைகள் உள்ளன. ஒரேயொரு வகை டெங்கு வைரஸ் தாக்கினால் சாதாரண டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட வகை டெங்கு வைரஸ்கள் தாக்கினால் ரத்தக்கசிவு டெங்கு காய்ச்சல் ஏற்படும். சாதாரண டெங்கு காய்ச்சல் மருந்து, மாத்திரைகளுக்கே குணமாகி விடும்.
ரத்தக்கசிவு காய்ச்சல் இருந்தால் உடலுக்குள் ரத்தக்கசிவு, பிளாஸ்மா கசிவு இருக்கும். கடுமையான காய்ச்சல், கண்களில் வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு, தோல்களில் ரத்தத்திட்டுகள், வயிறு, நுரையீரலில் நீர்கோர்த்து வயிற்றுவலி, மூச்சுத்திணறல் ஏற்படும், மலம் கருப்பு நிறத்தில் வெளியேறும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் குணப்படுத்தி விடலாம். விழிப்புணர்வு இல்லாமல் போனால் மரணத்தை தவிர்க்க முடியாது.
பெருகும் கொசுக்கள்
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு பொதுநல வழக்கு மையத்தின் மேலாண்மை அறங்காவலர் கே.கே.ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தமிழகத்தில் கொசு உற்பத்தி பெருகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஆண்டு கொசுவால் டெங்கு, சிக்கன்குனியா போன்ற மர்ம காய்ச்சலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கண்டு கொள்ளாத அரசு
கொசு உற்பத்தியைத் தடுக்கவும், கொசுக்களை ஒழிக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்த போதிலும் கொசுக்கள் உற்பத்தியாகிவரும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தவும், குப்பைகளை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இலவச கொசு வலை
எனவே, தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாகக் கொசு வலை வழங்கவும், அரசு மருத்துவமனையில் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா உள்ளிட்ட கொசுவால் பரவும் நோயால் பாதிக்கப்படுவோருக்கு தனி வார்டு அமைக்கவும், தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைக்கவும், அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிமன்றம் உத்தரவு
இந்த மனுவை கடந்த ஜூலை மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் மாவட்ட ரீதியாக டெங்கு மற்றும் சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் பட்டியலை அறிக்கையாக அளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.
47 பேர் பலி
இந்த வழக்கில் தமிழக சுகாரத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டெங்குவை தவிர்த்து மற்ற காய்ச்சலுக்கு 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிக்கன் குன்யாவுக்கு தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் கோரிக்கை
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். வீடுகள் மற்றும் தோட்டங்களில் டயர்கள், தேங்காய் ஓடுகள், பாட்டில்கள் போன்றவற்றில் நல்லதண்ணீர் தேங்க விடாதீர்கள் என்று மாவட்ட நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏடிஎஸ் வகை கொசுக்கள்
டெங்கு வைரஸ்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் முட்டையிட்டு பெருகுகின்றன. அந்த முட்டைகள் ஒருவாரத்துக்குள் கொசுக்களாகி விடும். எனவே பொது மக்கள் ஒத்துழைத்தால் நீர் நிலைகளிலேயே ஏடிஸ் கொசுக்களை அழித்து விடலாம் என்றும் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.