தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மாற்றம்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ்குப்தா 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து பிரவீன்குமார் தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பிரவீன்குமார் 2012 ஆம் ஆண்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தார். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, பிரவீன்குமார் மீது சில அரசியல் கட்சிகள் புகார் கூறின. இதையடுத்து தேர்தல் முடிந்ததும் தன்னை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிரவீன் குமார் மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் வற்புறுத்தினார்.
இதையடுத்து பிரவீன் குமாரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அவர் மாற்றப்படுகிறார்.
இது குறித்து பிரவீன்குமார், ‘இந்த பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தேன். சமீபத்தில் அதற்கு ஒப்புதல் அளித்து விட்டார்கள். தமிழக அரசிடம் தகுதி உள்ள அதிகாரிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் விரைவில் கேட்டுப்பெறும். அதை பரிசீலித்து புதிய அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமிக்குமம்" என்று தெரிவித்துள்ளார்.