3 தொகுதி இடைத்தேர்தல் : அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றத்தை கொத்தாக அள்ளிய அதிமுக
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. மூன்று தொகுதியையும் மொத்தமாக அள்ளியுள்ளது அதிமுக.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்களுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று வெளியானது.
தஞ்சையில் முதல் வெற்றியை சுவைத்த அதிமுக திருப்பரங்குன்றத்தை திரும்பவம் தன் வசமாக்கியது. அரவக்குறிச்சி தொகுதியிலும் அதிமுக தன் ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெற்றுள்ளது.
3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல்சுற்றில் இருந்தே 3 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.
தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார். 18சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 101333 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 74,487 வாக்குகள் பெற்றார். 26,846 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் திமுக வேட்பாளர் சரவணனை விட 42670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவின் ஏ.கே. போஸ் மொத்தம் 1,13032 வாக்குகள் பெற்றார். சரவணன், 70362 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
அதேபோல அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் கே.சி பழனிச்சாமியை விட அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். 20வது சுற்று முடிவில் செந்தில் பாலாஜி 23673 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கே.சி.பழனிச்சாமியை வீழ்த்தினார். செந்தில் பாலாஜி மொத்தம், 88068 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 64395 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.
தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் சட்டசபைக்குள் அடிஎடுத்து வைக்கிறார் செந்தில் பாலாஜி. அதிமுக மூன்று தொகுதிகளிலும் வெற்றிக்கனியை சுவைத்துள்ளது. மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் அதிமுகவின் எம்.எல்.ஏக்களின் பலம் 136 ஆக அதிகரித்துள்ளது.