உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறப்பு.. தமிழக விவசாயிகள் வரவேற்பு
தஞ்சை: தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை காவிரியில் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கிறது என விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டதைக் கண்டித்து பெங்களூர் முழுவதும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை காவிரியில் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இல்லாததால் இந்த பேராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகம் முழுமையான தண்ணீரை வழங்கினால் தான் தமிழகத்தில் சாகுபடியை தொடர முடியும். மேலும் மேட்டூரில் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால்தான் சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
மேலும், கூடுதல் தண்ணீரை பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா உடனடியாக கூட்டவும் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு அடாவடியில் ஈடுபடுவதாக தமிழ விவசாயிகள் சங்கத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீரை தருவதை அரசியலாக்குகிறது என்று கூறிய பாலகிருஷ்ணன், காவிரி தமக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் கர்நாடகா நடந்து கொள்வதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.