பரபரப்பு சம்பவம்.. ஆறுமுகசாமி ஆணையம் வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்!
சென்னை: சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு குறுக்கு விசாரணைக்காக வருகை தந்த நிலையில், அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஜெயலலிதா மறைந்தபோது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ். எனவே ஜெ. மறைவு குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன் சம்மனை ஏற்று, ஆணையத்தின் முன்னிலையில், ஜார்ஜ் ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ ஜார்ஜ் இல்லத்தில் 25 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து சோதனை மேற்கொண்ட நிலையில் நேற்று அவர் வெளிநாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
குறுக்கு விசாரணை
ஆனால், இன்று காலை ஜார்ஜ், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக வந்திருந்தார். இன்று குறுக்கு விசாரணைக்காக அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த தேதி மாற்றப்பட்டு மீண்டும் இன்னொரு நாளில் அவர் நேரடியாக வந்து குறுக்கு விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்று, இமெயில் வாயிலாக, சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
தெரியாமல் போனார்
ஆனால் அதைப் பார்க்காமலேயே நேரடியாக ஆறுமுகசாமி ஆணையத்திற்கு சென்றுள்ளார் ஜார்ஜ். ஆனால் ஆறுமுகசாமி கமிஷன் தரப்பிலிருந்து இன்று உங்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்று நாள் ஒதுக்கப்படவில்லை என கூறிவிட்டனர்.
திரும்பி சென்றார்
இதையடுத்து, அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். சிபிஐ அதிகாரிகள் ஜார்ஜ் வீட்டில் சோதனை மேற்கொண்டுவிட்டு இன்று காலையில் புறப்பட்டுச் சென்றார்கள். அப்படியான நிலையில் அவர் நேற்று வெளிநாட்டில் இருப்பதாக வெளியான தகவல் பொய் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
சிபிஐ பிடியில் ஜார்ஜ்
ஜார்ஜ் நேற்று சென்னையில் இருந்தால் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் பரவியது. ஆனால், ஜார்ஜ் இன்று ஆறுமுகசாமி விசாரணைக்கு நேரில் ஆஜராக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.