சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் அம்மா புராணம் பாடிய அமைச்சர் தங்கமணி
சென்னை: அம்மா... புரட்சித்தலைவி அம்மா... நீண்ட ஆயுளோடு இருந்து இந்த நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்... இவ்வளவு பெரிய மேடையில் என்னை அமரவைத்து அழகு பார்த்த அம்மாவிற்கு நானும் என் குடும்பத்தினரும் என்னென்றும் கடமைபட்டிருக்கிறோம் என்று சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் உணர்ச்சி பொங்க ஏற்புரை நிகழ்த்தினார் தொழில்துறை அமைச்சர் தங்கமணி.
சர்வதேச முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாடு சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா நேற்று முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுமார் 5 ஆயிரம் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டையொட்டி நடைபெற்ற கண்காட்சியில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்பு களை காட்சிப்படுத்தியிருந்தனர். இதற்காக மாநாட்டு வளாகத்தில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
வெற்றிகரமாக நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு நாளான இன்று பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கமணி, அம்மா... புரட்சித்தலைவி என்று வழக்கமான பாணியில் தொடங்கி தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு உள்ள ஏதுவான சூழ்நிலையை எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நீண்ட ஆயுளோடு இருந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்றார். மேலும் ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்த தன்னை இவ்வளவு பெரிய இடத்தில் அமர வைத்த அம்மாவிற்கு நானும் என் குடும்பமும் என்றென்றைக்கும் நன்றியுடன் இருப்போம் என்று உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி கூறினார்.