தேர்தல் நாள் அன்று அனைவருக்கும் பொது விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: அரசு ஊழியர்களுக்கு தேர்தல் நாளான ஏப்ரல் 24 அன்று பொது விடுமுறை அளித்துள்ள தமிழக அரசு,தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 24 ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் நடைபெறும் நாளான 24-ந் தேதியன்று அன்று பெரும்பாலான இடங்களில் வாரச்சந்தை நடைபெறும்.
அந்நாளில் வாக்காள பெருமக்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக வாரச்சந்தை தேர்தல் தேதிக்கு மறுநாள் அதாவது 25 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஏற்பாடு செய்யும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசாங்கம் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் தங்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய ஏதுவாக தேர்தல் நடைபெறும் நாளான 24 ஆம் தேதி தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " 1951 ஆம் வருட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135 பி- இன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
மேலும், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் தேர்தல் நாளான ஏப்ரல் 24 அன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.