தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் - திமுக, அதிமுக எம்பிக்கள் ஒரே மாதிரி சொல்றாங்களே?
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழியும், அதிமுக ராஜ்யசபா எம்பி மைத்ரேயனும் கூறியுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பன்னீர்செல்வத்தின் தலைமையிலான புதிய அரசு அமையும் என்று அதிமுக ராஜ்யசபா எம்.பி மைத்ரேயன் டெல்லியில் கூறியுள்ளார்.
இதேபோல திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசியுள்ளார். அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் ஆட்சி மாற்றம் பற்றி பேசியுள்ளனர். ஆனால் முதல்வர்தான் வேறு வேறாக இருக்கிறது.
ஓபிஎஸ் மோடி சந்திப்பு
எம்எல்ஏவாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமரை சந்தித்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து பேசியதாக தெரிவித்தார். சென்னை திரும்பிய உடனே உள்ளாட்சி தேர்தல் பற்றி டுவிட்டரில் பதிவிட்டார்.
மைத்ரேயன் பேட்டி
பன்னீர்செல்வத்துடன் பிரதமரைச் சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினரான மைத்ரேயனும் டெல்லிக்குச் சென்றிருந்தார். அப்போது செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது செயல்படாத அரசாங்கம் உள்ளது.
ஆட்சி மாற்றம்
இந்த அரசிடம் இருந்து நல்லாட்சியை எதிர்பார்க்க முடியாது. ஆகையால், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பன்னீர்செல்வத்தின் தலைமையிலான புதிய அரசு அமையும் என அவர் கூறினார்.
கனிமொழி பேச்சு
இதே போலவே கனிமொழியும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் திமுக தமிழகத்தை ஆளும் என்றும் பேசி வருகிறார். நெல்லை மாவட்டம் தென்காசி அருகே நடைபெற்ற விழாவில் பேசிய கனிமொழி, நாங்கள் தவறு செய்தால் தட்டிக் கேளுங்கள். நல்லது செய்யும்போது ஏன் தடுக்கிறீர்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்போது அதிகாரிகள் தடை செய்கிறார்கள். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
விரைவில் பொது தேர்தல் வரும்
இதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்தும், பிரேமலதா விஜயகாந்தும் தமிழகத்தில் விரைவில் பொது தேர்தல் வரும் என்று பேசி வருகிறார். அதிமுக ஆட்சி இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில் எதிர்கட்சியினர் மட்டுமல்லாது அதிமுகவினரே ஆட்சி மாற்றம் பற்றியும், பொது தேர்தல் பற்றியும் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.