கேரளாவுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் தமிழகம்.. ஒருநாள் ஊதியத்தை வழங்க அரசு ஊழியர்கள் முடிவு
வெள்ளத்தால் சின்னாபின்னமாகியுள்ள கேரளாவுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழக அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
Recommended Video
சென்னை : வெள்ளத்தால் சின்னாபின்னமாகியுள்ள கேரளாவுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழக அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
கேரளாவில் வெளுத்து வாங்கும் மழையால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
கேரள மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டது .
இதைத்தொடர்ந்து தமிழ் திரையுலகினர், நடிகர் சங்கம் என பலரும் கேரளாவுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் சின்னாபின்னமாகியுள்ள கேரளாவுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழக அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
துயரத்தில் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் ரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் துயரத்தில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பங்கேற்கவும், உதவி செய்யவும் முடிவெடுத்துள்ளோம்.
முதல்வருக்கு கோரிக்கை
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பொதுமக்களில் ஒரு பகுதி என்ற நிலையில் நிவாரண நிதியாக எங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரண நிதியாக வழங்க உரிய ஆணை வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூத்த சங்கம் என்ற முறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது.
தங்களின் பங்களிப்பு
இதற்கு முன் உதாரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வினை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பினை செலுத்தியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் தகவல்
இதனிடையே கேரளாவுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.