மத்திய அரசின் திட்டங்களை வெற்றிக்கதைகளாக தொகுத்து அனுப்ப அதிகாரிகளுக்கு எடப்பாடி அரசு உத்தரவு!
மத்திய அரசின் திட்டங்களை வெற்றிக்கதைகளாக தொகுத்து அனுப்ப மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மாவட்டங்கள் தோறும் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை தொகுத்து அனுப்ப எடப்பாடி அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று ஆண்டுகள் சாதனை மலர் தயாரிப்புக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிரதமர் மோடியால் மத்திய அரசின் திட்டங்களான பிரதான் மந்திரி சுக்ரியா சம்ரீதி யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா உள்ளிட்ட 17 வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களை வெற்றிக் கதைகளாக தொகுத்து ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களாக அனுப்ப எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்தில் உள்ள அலுவலர்கள் இதுகுறித்த தகவல்களை சேகரித்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று அதனை துறை தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை வெற்றிக் கதைகளாக ஆவணப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருப்பது அவரது மற்றொரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு குறித்து பொதுமக்கள் மத்தியில் குறை கூறவேண்டாம் என தனது அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர்கள் குறித்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.