ம.பியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5.05, தமிழகத்தில் ரூ.7.01.. அதானி சோலார் கம்பெனிக்கு அடித்த லக்!
சென்னை: அதானி குழுமத்திடமிருந்த அதிக விலைக்கு தமிழக அரசு மின்சார கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் அதானி குழுமம் குறைந்தவிலையில் சூரிய ஒளி மின்சாரத்தை வழங்கும் நிலையில், தமிழகத்தில் அதைவிட அதிக விலைக்கு சோலார் மின்சாரம் வாங்கப்படுவதே இந்த சர்ச்சைக்கு காரணம்.
ஒப்பந்தம்
ராமநாதபுரம் மாவட்டத்தில், 648 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் சோலார் ஆலைகளை நிறுவுவதற்காக அதானி குழுமத்துடன் சமீபத்தில், தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. 25 ஆண்டுகால ஒப்பந்தமான இதில், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.7.01 என்ற விலை கொடுத்து தமிழக அரசு கொள்முதல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம.பியில் கம்மியாக கேட்ட அதானி
இதனிடையே மத்திய பிரதேச அரசு, 300 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் மின் ஆலை அமைக்க, 25 ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில், சமீபத்தில் டெண்டர் கோரியிருந்தது. அந்த டெண்டர் நேற்று திறக்கப்பட்டது. அப்போது, அதானி நிறுவனம் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.4 என்ற விலையை நிர்ணயம் செய்திருந்தது.
இது அதைவிட கம்மி
ஆனால், மொரீசியஸ் நாட்டை சேர்ந்த ஸ்கை பவர் சவுத் ஈஸ்ட் ஆசியா ஹோல்டிங் என்ற நிறுவனம், அதைவிட குறைவாக ஒரு யூனிட்டுக்கு 5.05 ரூபாய் போதும் என்று விலை நிர்ணயம் செய்தது. எனவே அந்த நிறுவனத்துக்கு இத்திட்டத்தை செயல்படுத்தும் உரிமையை மத்திய பிரதேச பாஜக அரசு வழங்கியுள்ளது. அதானி குழுமத்துக்கு ஆர்டர் தரப்படவில்லை. தமிழகம் மிக அதிகமாகவே ஒரு யூனிட் மின்சாரத்துக்கு செலவிடுகிறது என்ற உண்மையை மத்திய பிரதேச டெண்டர் விவரங்கள் உணர்த்துகிறது.
நிலம் கொடுத்திருக்கலாம்
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மத்திய பிரதேசத்தில் அரசே நிலத்தையும் வழங்கி மின் உற்பத்தி செய்ய நிறுவனங்களை அழைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அப்படியில்லை என்பதால் நிறுவனங்கள் அதிக விலை கேட்கின்றன" என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மத்திய பிரதேசத்தில் அரசே நிலத்தையும் வழங்கி மின் உற்பத்தி செய்ய நிறுவனங்களை அழைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அப்படியில்லை என்பதால் நிறுவனங்கள் அதிக விலை கேட்கின்றன" என்றார்.
டெண்டர் விடுவதில்லை
அதேநேரம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2014ம் ஆண்டு முதல் டெண்டர் மூலம் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதை தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுப்பதுதான், இந்த பிரச்சினைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
குஜராத்திலேயே கம்மி
ஏனெனில், சூரிய ஒளிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில், நாட்டிலேயே முன்னணியில் உள்ள குஜராத்தில் கூட ஒரு யூனிட் மின்சாரத்திற்கான செலவு ரூ.7க்கு கீழேதான் உள்ளது. 2 வருடங்கள் முன்புவரை ரூ.9-ஆக இருந்த நிலையில், தற்போது மளமளவென செலவை குறைத்துள்ளது அம்மாநில அரசு என்பது குறிப்பிடத்தக்கது.