6 மாதத்தில் 1 கோடி மூட்டை "அம்மா" சிமெண்ட் விற்பனையாகி சாதனை
சென்னை: கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஒரு கோடி மூட்டை அம்மா சிமெண்ட் விற்பனையாகியுள்ளதாம். இதன் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனராம்.
தமிழகம் முழுவதும் உள்ள 470 கிட்டங்கிகள் மூலம் இந்த சிமெண்ட் விற்பனை நடந்துள்ளதாக தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவன செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி அம்மா சிமெண்ட் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம்.
5.17 மெட்ரிக் டன்
அம்மா சிமெண்ட் விற்பனை தொடங்கி 2015 ஜூலை 16ம் தேதி வரை மொத்தம் 5.17 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனையாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 கோடி மூடை
மூடைக் கணக்கி்ல் பார்த்தால் இது 1 கோடி மூடைகளாகும். 470 கிட்டங்கிகள் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.33 லட்சம் பேருக்கு
மொத்தமாக 1 லட்சத்து 33 ஆயிரத்து 595 பேர் இந்த அம்மா சிமெண்ட் வாங்கி பயனடைந்துள்ளனர் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மூடை ரூ. 190
அம்மா சிமெண்ட் சலுகை விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டப்படி ஒரு மூடை சிமெண்ட் ரூ. 190 என்ற மானிய விலையில் வழங்கப்படுகிறது.
ஜெயலலிதா அறிவித்த கடைசி அம்மா திட்டம்
அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர் உள்ளிட்ட அம்மா பிராண்ட் திட்டங்களின் வரிசையில் கடந்த ஆண்டு ஜெயலலிதா அறிவித்த கடைசி அம்மா திட்டம் இதுதான்.
ஜனவரி 5ம் தேதி முதல்
கடந்த ஆண்டு ஜெயலலிதா இந்தத் திட்டத்தை அறிவித்த பின்னர் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குப் போய் விட்டார். முதல்வர் பதவியையும் இழந்தார். இதனால் தாமதமாக இந்தாண்டு ஜனவரி 5ம் தேதிதான் இந்தத் திட்டம் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.
15 நாளில் ஒரு லட்சம் மூடை விற்று சாதனை
ஆனால் இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. விற்பனை தொடங்கிய 15 நாட்களிலேயே ஒரு லட்சம் மூடைகள் விற்பனையாகின.
அதிகபட்சம் 750 மூடை
அதிகபட்சம் 1500 சதுர அடி அளவுள்ள வீடு கட்டுவதற்கு அதிகபட்சம் 750 மூடை அம்மா சிமெண்ட் வாங்கிக் கொள்ள முடியும். வீடுகளை மராமத்து செய்வதாக இருந்தால் அதிகபட்சம் 100 மூடை வரை பெறலாம்.
வருவாய்த்துறை சான்றிதழுடன்
அம்மா சிமெண்ட் பெறுவதற்கு கட்டட வரைபடம் மற்றும் வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகளிடமிருந்து உரிய சான்றிதழ்களைப் பெற்று விண்ணப்பித்துப் பலன் அடையலாம்.
மேலும் தகவல்கள் பெற
இந்தத் திட்டம் குறித்து மேலும் தகவல்கள் பெற 1800 425 22000 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசியில் அழைத்து தகவல்களைப் பெற்று பலன் அடையலாம்.