கோவையில் மாணவி பலியான விவகாரம்: ரூ.5 லட்சம் இழப்பீடு.. கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
கோவை கலைமகள் கல்லூரியில் பலியான மாணவியின் குடும்பத்துகுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோவையில் மாணவி பலியான விவகாரம்: ரூ.5 லட்சம் இழப்பீடு.. கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
கோவை: கலைமகள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. தனியார் மையத்தின் மூலம் நடைபெற்ற இந்த பயிற்சியில் யோகேஸ்வரி என்ற மாணவி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
பயிற்சியின் போது பயிற்சியாளரால் கீழே தள்ளிவிடப்படும் அவர் சன்ஷேடில் அடிப்பட்டு நிலைகுலைந்து கீழே விழும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அந்த காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது.
இழப்பீடு அறிவிப்பு
மாணவி உயிரிழப்புக்கு காரணமான அந்த தனியார் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
மிகவும் துயரம் அடைந்தேன்
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டிணம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த, ஆலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டர் என்பவரின் மகள் செல்வி லோகேஸ்வரி என்பவர் 12.7.2018 அன்று கல்லூரியில், பயிற்சியின் போது, ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
கடும் நடவடிக்கை - உத்தரவு
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த யோகேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணாக்கர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் கல்லூரிக் கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
ரூ.5 லட்சம் இழப்பீடு
எனது உத்தரவின் பேரில், காவல் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதில், முறையற்ற பயிற்சி வழங்கிய ஆறுமுகம் என்பவர் நேற்றிரவே கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த செல்வி யோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் ஐந்து லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.