குட்டை பாவாடை சீருடைக்கு குட்பை... நர்ஸ் சீருடை மாற்றம் தமிழக அரசு முடிவு
அரசு மருத்துவமனைகளில் உள்ள நர்ஸ்களின் குட்டைப்பாவாடை சீருடையை மாற்றிவிட்டு புதிய வகை சீருடையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை: அரசு மருத்துவமனைகளில் வெள்ளை நிற குட்டை பாவாடை சட்டையில் நர்ஸ் பணி செய்வோருக்கு புதிய சீருடை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்கள் வெள்ளை நிற குட்டைப் பாவாடை மற்றும் சட்டையில் பணியாற்றி வருகிறாரகள். அவர்களுக்கு அந்த உடை அசௌகரியமாக இருப்பதாக நீண்டகாலமாக புகார் இருந்து வந்தது.
அரசு மருத்துவமனைகளில், கிரேடு- I, II, III எனப்படும் அந்த மூன்று பிரிவுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சீருடைகளையே அரசு மருத்துவமனை நர்ஸ்கள் அணிகிறார்கள்.
பெண் நர்ஸ்கள் குட்டைப் பாவாடை போன்ற உடுப்பு அணிந்து நீண்ட சாக்ஸ்சுடன் பணிக்கு வருகிறார்கள். இந்த சீருடை தற்போதைய பணிகளுக்கு மிகவும் அசௌகரியமாக உள்ளது என்று செவிலியர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நர்ஸ்களின் சீருடையை மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கைவிடுக்கப்பட்டது.
அதன் பேரில் நர்ஸ்களின் சீருடையை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு மாதிரிகளில் நர்ஸ்களுக்கான உடை தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆண் நர்ஸ்களுக்கு பேண்ட், வெள்ளை நிற ஓவர்கோட் அணியலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெண் நர்ஸ்கள் பேண்ட் மற்றும் சேலை அணியும் வகையில் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் அரசு மருத்துவமனை நர்ஸ்கள் சீருடை மாற்றப்படும் என்று தெரிகிறது.