ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு கிடையாது மக்களே... அரசு அறிவிப்பு
ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளதுள்ளது மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
ரேஷன் கடைகளில் இனி துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உளுந்தம் பருப்பு கொள்முதலை நிறுத்தி விட்டதாக தமிழக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
கனடியன் பருப்பு, துவரம் பருப்பு, மசூர் பருப்பு என ஏதாவது ஒரு பருப்பு மட்டும் ஒரு கிலோ வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
நியாய விலை கடைகள்
தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் உள்ளன. பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெயும், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
பருப்பு இல்லையே
சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த துவரம் பருப்பு, பாமாயில், உளுந்தம் பருப்பு சரிவர வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டங்கள், அறிக்கைகள் வாயிலாக பொதுமக்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பாமாயில் கிடைக்குதா?
அதைத்தொடர்ந்து துவரம் பருப்பு, பாமாயில் ரேஷன் கடைகளில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் உளுந்தம் பருப்பு மட்டும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு ரேஷன் கடைகளில் இருந்த பட்டியலில் உளுந்தம் பருப்பு இருந்த இடம் அழிக்கப்பட்டுவிட்டது.
உளுந்து வாங்க நிதியில்லையே
ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு இனி இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அரசு டெண்டர் விட்டு உளுந்தம் பருப்பை கொண்டு வரவேண்டும். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அரசிடம் நிதி இல்லாததே இதற்கு காரணம்.
மசூர் பருப்புதான்
அரிசி, கோதுமை, பாமாயிலும் தேவைக்கு ஏற்றாற்போல் வழங்குவது கிடையாது. துவரம் பருப்பும் நல்ல துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக மசூர் பருப்புதான் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் ஒரு கிலோ பருப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
இட்லி சாப்பிட முடியாதா?
பலசரக்கு கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் ஒரு கிலோ துவரம் பருப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி இட்லி, வடை ஆகியவைகளுக்கு சூப்பர் மார்க்கெட், வெளிகடைகளில் பருப்பு வாங்கி பயன்படுத்த வேண்டும்.
மூடுவிழாவா?
ஏற்கனவே நவம்பர் 1ஆம் தேதி முதல் ரேசன்கடைகளில் சர்க்கரை விலை உயர்ந்து விட்டது. இதற்கே மக்கள் கொதித்து போயுள்ளனர். நடுத்த மக்கள் அதிகம் வாங்கும் உளுந்தம்பருப்பு, துவரம் பருப்பிலும் அரசு கை வைத்து விட்டது. ஒரேடியாக ரேசன் கடைகளை மூடும் நடவடிக்கையா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
[READ THIS: இனி எல்லாம் இப்படித்தான்.. சர்க்கரை விலை உயர்வின் பின்னணியில் சர்வதேச அரசியல்?]