புதுச்சேரியில் இயக்கப்பட்ட தமிழக அரசின் 4 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு
புதுச்சேரியில் இயக்கப்பட்ட தமிழக அரசின் 4 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
புதுச்சேரி: தமிழக அரசின் 4 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலும் இயங்கவி்ல்லை.
ஆட்டோ, லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்களும் இயங்கவில்லை. தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கி வருகிறது.
கூட்டணி கட்சிகள் ஆதரவு
இன்று காலை 6 மணி முதல் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிலும் திமுக நடத்தும் இந்த போராட்டத்திற்கு கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடைகள் மூடல்
இதேபோல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறிகள் அதிகமாக விற்கக்கூடிய பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், மீன் அங்காடி ஆகியவையும் மூடப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.
திருப்பி அனுப்புகின்றனர்
புதுச்சேரியில் பந்த் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் காலையிலேயே ஊர்வலமாக புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கு வரும் ஆட்டோக்கள் மற்றும் வெளிமாநில பேருந்துகளை வழிநிறுத்தி இங்கு பந்த் போராட்டம் நடைபெறுகிறது என்றும், ஏன் இங்கு வந்தீர்கள் என்று கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
கண்ணாடிகள் உடைப்பு
இந்நிலையில் தமிழகத்திலிருந்து புதுச்சேரி சென்ற 4 தமிழக அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர். புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே தமிழக அரசு பேருந்துகள் மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்கியதில் பேருந்து கண்ணாடி உடைந்தது.
போலீஸ் குவிப்பு
பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதை அறிந்த போலீசார்கள், அந்த பகுதிக்கு விரைந்து சென்று, கண்ணாடி உடைத்தவர்களை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரியில் பதற்றம்
கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பேருந்துகளை புதுச்சேரிக்கு இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.