மாட்டிறைச்சி விவகாரம்... தமிழக அரசு விரைவில் நல்ல முடிவெடுக்கும் - திண்டுக்கல் சீனிவாசன் உறுதி
மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியளித்துள்ளார்.
திருநெல்வேலி: மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் தமிழக அரசு மிக விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , ' மாட்டிறைச்சி தடையைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் அரசு ஆணை கிடைக்கப்பெற்று அதை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே முடிவை அறிவிப்போம்' என்று கூறியுள்ள நிலையில் அமைச்சர் சீனிவாசன் இவ்வாறு கூறியுள்ளார்.
திருநெல்வேலிக்கு வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " மாட்டிறைச்சி விற்பனை குறித்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உத்தரவு தொடர்பாக தமிழக அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் சீனிவாசன், " ரஜினிகாந்த் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று விமர்சித்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அரசியலுக்கு வரட்டும். வரவேற்கிறோம். அதற்காக அவர் இவ்வாறு கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள இயலாது.
தங்கள் தொகுதி பிரச்னைகள் குறித்துதான், எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்தித்து வருகிறார்கள். சிலர் இதை அரசியலாக்குகிறார்கள். அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும். தமிழகத்தில் 142 ஆண்டுகளாக இல்லாத கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது." என்று கூறினார்.