உள்ளாட்சி தேர்தல்... உலக முதலீட்டாளர்கள் மாநாடு - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
இந்தாண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 96,341 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடங்கி வைத்தார். கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
ஆளுநர் உரையை பட்ஜெட் போல நினைத்து ஸ்டாலின் பேசி உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் ஆளுநர் உரையில் புதிய திட்டம் அறிவிக்க வேண்டியதில்லை. சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் விரிவான திட்ட அறிக்கை கிடைத்த பின் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும்.
உயர்கல்வி சேர்க்கையில் 46.9% என்ற அளவில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழக மாணவர்களை பாதிக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவிக்கும்.
கடந்த 10 மாதங்களில் மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தால் 4,468 மருத்துவர்கள் உள்பட 6,438 மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்தில் ரூ.420.60 கோடி செலவில் மருத்துவமனை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மீனவர்களை தேடும் மீனவ அமைப்புகளுக்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை அரசு செய்கிறது
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகுதி வரையறை பணிகள் நடைபெற்று வருகிறது. தொகுதி வரையறை முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்.
சர்க்கரை ஆலைகளுக்கான மாநில அரசின் பங்கை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 96,341 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.