ரூ. 2,000 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை... தமிழகத்தில் 5 இடங்கள் தயார் என அதிகாரிகள் தகவல்
சென்னை: தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தை (எய்ம்ஸ்) மத்திய அரசு அமைப்பதற்கு ஏதுவாக, ஐந்து இடங்களில் அரசு நிலம் தயாராக உள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகம், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் டெல்லியில் உள்ளது போன்று அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையை அமைப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதமே பிரதமர் நரேந்திர மோடிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். 2014-15-ஆ்ம் நிதியாண்டிலேயே இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எய்ம்ஸ் மையத்தை மத்திய அரசு அமைக்கத் தேர்வு செய்வதற்காக செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்களில் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக இருப்பதாகவும் இவற்றில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை மத்திய அரசு தேர்வு செய்து எய்ம்ஸ் மையத்தை அமைக்கலாம் என பிரதமருக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.
சாலை-ரயில் வசதி, தண்ணீர்-மின்சார வசதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் இந்த 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மையம் விரைவாக அமையும் நிலையில், மாணவர்களுக்கு தரமான மருத்துவக் கல்வி, பொது மக்களுக்கு தரமான மருத்துவ சேவை, மருத்துவ நிபுணர்களுக்கு ஆராய்ச்சி வசதி ஆகியவை கிடைக்கும். எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் மையத்தை அமைக்கும் மத்திய அரசின் முயற்சிகள் அனைத்துக்கும் விரைவான ஒத்துழை்ப்பு அளிக்கத் தயார்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.