உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் !
சென்னை: தமிழர்களின் பாரம்பரியம் மிக்க உடையான வேஷ்டி அணிவதை, ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச வேஷ்டி தினமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. அதனால் இன்று உலகம் முழுவதும் வேஷ்டி தினம் கொண்டாடப்பட்டது.
வேஷ்டி தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தோடு ஒன்றியது என்பதை பறைசாற்றும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவரர்கள் வேஷ்டி அணிந்து உற்சாகமாக அலுவலகம் வந்திருந்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்று வேஷ்டி அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். பெரும்பாலும், அவர்களில் வேஷ்டி, சேலை அணிபவர்கள் சிலர் மட்டுமே.
ஆனால் இன்று வேஷ்டி தினம் என்பதால் பெரும்பாலானோர் வேஷ்டி அணிந்து பணிக்கு வந்திருந்தது பார்பவர்களை ஒரு நிமிடம் மெய் சிலிர்க்க வைத்தது. மேலும், தலைமை செயலகம் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் காட்சியளித்தது.
இன்றைய இளம் தலைமுறையிடையே வேஷ்டி கட்டும் ஆர்வம் குறைந்து வருகிறது என்பதற்காக சில ஜவுளி நிறுவனங்கள் வேஷ்டிகளில் சில புதுமைகளை புகுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகைகளில் வேஷ்டிகளில் பெல்ட் மாடல், செல்போன் வைத்துக்கொள்வதற்கு ஏதுவாக பாக்கெட் என பல புதிய மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது கல்லூரி மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.