தோல்விக்கு பொறுப்பு: அதிமுக அமைச்சர்கள் 'உள்ளே- வெளியே' பின்னணி தகவல்கள்
சென்னை: லோக்சபா தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதும் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்துள்ளார்.
அமைச்சர்கள் தாமோதரன் (விவசாயத் துறை), ரமணா (வருவாய்த் துறை), பச்சைமால் (தொழிலாளர் நலத் துறை) ஆகியோரை, 'டிஸ்மிஸ்' செய்துள்ளார். அவர்களுக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர்கள், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி, கோகுல இந்திரா ஆகியோரை, மீண்டும் அமைச்சராக்கி உள்ளார்.
அதேபோல லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க தோல்வி அடைந்த, மூன்று தொகுதிகளின், மாவட்டச் செயலாளர்களை, அதிரடியாக மாற்றம் செய்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பொறுப்பாளர்கள்
தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க முதன்முறையாக, தனித்து போட்டியிட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும், அமைச்சர், மாவட்டச் செயலாளர் உட்பட மூன்று பேர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். தேர்தலில் தோல்வி அடைந்தால், பதவி பறிப்புக்குள்ளாக வேண்டிய நிலை வரும் என பொறுப்பாளர்களுக்கு, கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்தது.
37 வெற்றி 3 தோல்வி
அதன் பயனாக 37 லோக்சபா தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தர்மபுரி, கன்னியாகுமரி தொகுதியிலும், புதுச்சேரியில் மட்டும் தோல்வியைத் தழுவியது.
அமைச்சரவை மாற்றம்
லோக்சபா தேர்தல் முடிந்ததும், அமைச்சரவை மாற்றம் இருக்கும் என தேர்தலின் போதே தகவல் பரவியது. இந் நிலையில் 14வது முறையாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பச்சைமால் பதவி பறிப்பு
விவசாயத்துறை அமைச்சர் தாமோதரன், வருவாய் துறை அமைச்சர் ரமணா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பச்சைமால், ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கோகுல இந்திராவிற்கு பதவி
அவர்களுக்கு பதிலா, முன்னாள் அமைச்சர்களான, கலசப்பாக்கம் எம்.எல்.ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தொண்டாமுத்தூர் எம்,எல்.ஏ., வேலுமணி, சென்னை, அண்ணாநகர் எம்.எல்.ஏ. கோகுல இந்திரா ஆகியோர் அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளனர்.
வேளாண் துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி; உள்ளாட்சி மற்றும் சட்டத் துறை அமைச்சராக வேலுமணி; கைத்தறித் துறை அமைச்சராக கோகுல இந்திரா என, அவர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
உள்ளே- வெளியே
புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி, ஆகியோர், 2012 ஜனவரி, 26ம் தேதி ஒரே நேரத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். அப்போது வேலுமணிக்கு பதிலாக, தாமோதரன் அமைச்சரானார். இம்முறை தாமோதரனுக்கு பதிலாக, வேலுமணி அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
திமுக வேட்பாளர் தோல்விக்கு பரிசு
கோகுல இந்திரா, கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கோகுல இந்திரா தி.மு.க., வேட்பாளர் தயாநிதி மாறனின் தோல்விக்கு வழிவகுத்தார். அதற்கு பரிசாக, அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் தொகுதி
இதில் அண்ணாநகர் தொகுதியில் 22765 வாக்குகள் அதிமுகவிற்கு முன்னிலை கிடைத்தது. அதற்கு அடுத்தபடியாக வில்லிவாக்கம் தொகுதியில் 10,000 வாக்குகள் முன்னணி பெற்றதால் அதிமுக. இதனாலேயே 50000 வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதி மாறனை வெல்ல முடிந்தது என்கின்றனர். எனவேதான் கோகுல இந்திராவிற்கு அமைச்சர் பதவி பரிசளிக்கப்பட்டுள்ளதாம்.
டம்மியான சுந்தர்ராஜ்
கைத்தறித் துறை அமைச்சராக இருந்த சுந்தரராஜ், 'டம்மி' ஆக்கப்பட்டு, அவரிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை தரப்பட்டுள்ளது. இவரிடம் இருந்த கைத்தறித் துறை, கோகுல இந்திராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தோல்வி
லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியதுடன், மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. அதன் காரணமாக, அந்த மாவட்ட அமைச்சரான பச்சைமால் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
பணப்பிரச்சினையில் தாமோதரன்
கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில், அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ள போதிலும், தேர்தல் பணிக்கு பொறுப்பு வகித்த அமைச்சர் தாமோதரன் பணம் செலவு செய்யவில்லை என்ற புகார் கூறப்பட்டது.
வேலுமணிக்கு பதவி
கோவையில் அ.தி.மு.க குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பதவியில் இல்லாமல் இருந்தாலும், வேலுமணி நிறைய செலவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த மாவட்ட அமைச்சர் தாமோதரன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, வேலுமணிக்கு மீண்டும் அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.
முதல் மனைவி விவகாரம்
வருவாய் துறை அமைச்சர் ரமணா, சட்டசபை தேர்தல் வேட்பு மனுவில் முதல் மனைவி பெயரை மறைத்ததாக ஒரு குற்றச்சாட்டு சமீபத்தில் கிளம்பியது. இந்த விவகாரத்தில் அவர் அமைச்சர் பதவியை இழந்துள்ளார் என்கிறார்கள். இதற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லையாம்.
முனுசாமி.. தர்மபுரி தோல்விக்கு பொறுப்பு
நால்வர் அணியில் முக்கிய பங்கு வகித்து வந்த கே.பி.முனுசாமி உட்பட மூன்று அமைச்சர்களின் இலாகாக்களில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி மற்றும் சட்டத் துறை அமைச்சராக இருந்த முனுசாமி, அதிகாரம் குறைந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். காரணம், தர்மபுரியில் பாமகவுக்குக் கிடைத்த வெற்றியும் அதிமுகவுக்குக் கிடைத்த தோல்வியும் தான். முனுசாமியின் அமைச்சர் பதவி தப்பியதே பெரிய விஷயம். இதன்மூலம் நால்வர் அணியில், முக்கிய பங்கு வகித்து வந்த முனுசாமியின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் குறைப்பு
வன்னியர் அல்லாத உயர் கல்வித்துறை அமைச்சரான பழனியப்பன் பொறுப்பில் தர்மபுரி தொகுதியை ஒப்படைத்ததும், பண பட்டுவாடாவை முறையாக செய்யவில்லை என்பதும் முனுசாமி மீது கூறப்படும் குற்றச்சாட்டு. அதனால், அவரிடம் இருந்த பெரிய இலாகாக்கள் பறிக்கப்பட்டு அமைச்சரவையில் அவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் நீக்கம்
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க தோல்வி அடைந்த, மூன்று தொகுதிகளின் மாவட்டச் செயலர்களை, அதிரடியாக மாற்றம் செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எச்சரிக்கை விடுத்ததோடு மட்டுமல்லாது சொன்னதைப் போல தோல்வியைக் கொடுத்த நிர்வாகிகளை களையெடுத்துவிட்டார் ஜெயலலிதா.
புதுச்சேரி தோல்விக்கு பொறுப்பு
புதுச்சேரியில் அதிமுக தோல்வியை தழுவியதை அடுத்து மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் பொறுப்பை புருஷோத்தமன் கூடுதலாக கவனிப்பார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், புதுச்சேரி மாநில ஜெயலலிதா பேரவை செயலர் பொறுப்பில் இருந்து ஓம் சக்தி சேகர் நீக்கப்பட்டுள்ளார்.