ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: தமிழக வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட கோரிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்
ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்தும்போது அதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது என்று தமிழக அமைச்சர் கே. பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னை: சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு அமலின்போது தமிழகத்திற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்டுவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை 5%,12%,18%,28% என நான்கு அடுக்காக விதிக்க வியாழக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்திருந்தது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பெரும்பான்மையான உணவுப் பொருட்களுக்கு வரி விதிப்பு கிடையாது. அடுத்த வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டியை அமல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் நான்காவது கூட்டம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மாநில பள்ளிக் கல்வி, விளையாட்டு இளைஞர் நலத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வணிக வரித் துறை ஆணையர் எஸ்.சந்திரமௌலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. பாண்டியராஜன், ஜிஎஸ்டி கவுன்சில் நான்காவது கூட்டத்தின்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்களுக்கு நான்கு அடுக்காக வரி விதிப்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்தும்போது அதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
அப்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை மத்திய நிதி அமைச்சரும் ஏற்றுக் கொண்டார். பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு விதமான பொருளுக்கும் எத்தகைய வரியை விதிப்பது என்பது தொடர்பாக அடுத்து நடைபெறும் கூட்டத்திலும் தொடர்ந்து விவாதிக்கப்பட உள்ளது என்றார்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த முறைசாரா கூட்டம் நவம்பர் 20ம் தேதியும், முறைசார்ந்த கூட்டம் 24, 25ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் வரி விதிப்பு முறைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன என்றும் அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.