அய்யய்யோ... தற்கொலைதாரிகளின் தலைநகரமாக தமிழகம்? 'ஷாக்' அடிக்கும் புள்ளி விவரங்கள்!!
சென்னை: இந்திய அளவில் தற்கொலைதாரிகளின் தலைநகரமாக தமிழகம் உருவெடுத்து வருவதாக அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய குற்ற ஆவணங்களின்படி 2014ஆம் ஆண்டு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிக அளவில் தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. தற்கொலை மாநிலங்களின் டாப் 5 இடங்களில் இருப்பது புதுச்சேரி, தெலுங்கானா, கேரளா, தமிழகம், கர்நாடகா.
ஒரு லட்சம் பேர் மக்கள் தொகையில் புதுச்சேரி 40.4%; தெலுங்கானா 26.5% ; கேரளா 23.9%; தமிழகம் 23.4%; கர்நாடகா 17.8% என்கிற அளவுக்கு தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.
மகாராஷ்டிரா, தமிழகம்..
இந்திய அளவில் தற்கொலையில் டாப் மாநிலங்கள் என்று பார்த்தால் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா. இதில் மகாராஷ்டிராவில் 16,307, தமிழகத்தில் 16,122, கர்நாடகாவில் 10,945, தெலுங்கானாவில் 9, 623 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சென்னைதான் அதிகம்...
தென்னிந்திய பெருநகரங்கள் அடிப்படையில் பார்த்தான் சென்னையில்தான் தற்கொலைகள் அதிகம்... 2014ஆம் ஆண்டில் சென்னையில் 2,214 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கு அடுத்ததாக பெங்களூருவில் 1,906 தற்கொலை சம்பவங்கள் பதிவாகி உள்ளன. வட இந்திய நகரமான டெல்லியில் 1,847 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
என்ன காரணங்கள்?
தென்னிந்தியாவில் இப்படி தற்கொலை அதிகரித்து வருவதற்கு குடும்ப விவகாரங்கள், பணியிடத்தில் பிரச்சனை, நிதி நெருக்கடி, உடல்நலக் குறைவு ஆகியவைதான் பிரதான காரணங்களாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. நாட்டின் மிகப் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்தியபிரதேசம், குஜராத், ஹரியானா, ஒடிஷா பஞ்சாப் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் நிதி நெருக்கடி, குடும்ப பிரச்சனைகள், உடல்நலக் குறைவு, போதைப் பழக்கத்தால் தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன.
இதர காரணங்கள்...
அதிலும் தமிழகத்தில் குடும்ப பிரச்சனைகள் இல்லாத காரணங்களுக்காக 5,577 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கேரளாவில் 3,149. அதாவது கல்யாண விவகாரம், கள்ளக் காதல், காதல் தோல்வி, கருத்தரிக்காதது போன்றவை இவற்றில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
உடல்நலக் குறைவு
உடல்நலக் குறைவால் தற்கொலை செய்துகொள்வோரில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 4,514 பேர் இந்த காரணத்துக்காக உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உடல்நலக் குறைவு காரணமாக 1,500 முதல் 2,300 பேர் வரை தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். குடி மற்றும் போதைப் பழகத்தால் தமிழகத்தில் 552 பேரும் கேரளாவில் 475 பேரும் உயிரை மாய்த்துள்ளனர். ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பழக்கத்தால் தற்கொலை செய்தவர் எண்ணிக்கை 38 மட்டுமே...
குடும்பத் தலைவிகள் தற்கொலை
குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்யும் நகரங்களில் பெங்களூருவும் சென்னையும் முதலிடத்தில் இருக்கின்றன. பண நெருக்கடிதான் இதற்கு முதல் காரணமாக இருக்கிறது.
நேசித்தவர்களுக்கான தற்கொலையில் டாப்
குறிப்பாக தாங்கள் நேசித்தவர்களுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட தற்கொலைகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மொத்தம் 23 தற்கொலைகள் இந்த பட்டியலில் அடங்குகிறது.
விட்டால் தற்கொலைதாரிகளின் தலைநகராகுமோ தமிழகம்?