இஸ்லாம் பற்றி விமர்சனம்.. ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கரை டிஸ்மிஸ் செய்ய முஸ்லிம் அமைப்பு மனு!
சென்னை: இந்து அமைப்புகளின் கோபப் பார்வையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரின் மீது இஸ்லாமிய அமைப்புகளும் கோபம் கொண்டுள்ளன. காரணம், இஸ்லாம் குறித்து அவர் அவதூறு பிரசாரம் செய்வதுதான் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசின் சென்னை மண்டல ஒழுங்கு நடவடிக்கை ஆணையரான ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர், அவ்வப்போது கிறிஸ்தவ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மத பிரசாரம் செய்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் பிரச்சாரம் செய்ய சென்ற இடத்தில் இந்து மக்கள் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவமும் அரங்கேறியது.
இதையடுத்து உமா சங்கர், கிறிஸ்தவ பிரசங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தலைமைச் செயலர் தடை விதித்தார். இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்தும், உமா சங்கர் அவதூறாக பிரசாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
நபிகள் நாயகத்தை விமர்சனம் செய்யும் உமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஜமாஅத் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில், ''இஸ்லாம் மதம் குறித்தும், குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் குறித்தும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். எனவே, அரசு ஊழியராக இருந்து கொண்டு மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் உமாசங்கர் மீது நடவடிக்கை எடுத்து, அவரை பணிநிக்கம் செய்ய வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், உமா சங்கரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி. வரும் 10ம் தேதி செவ்வாய் கிழமை, காலை 10.30 மணிக்கு, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.