திரும்பிப் பார்த்தால் ஒரு தலைவர் கூட இல்லையே!
Recommended Video
சென்னை: தேசத்திற்கே தலைமை தாங்கக் கூடிய தகுதி படைத்த தலைவர்களைத் தந்த பூமி தமிழ்நாடு. ஆனால் இன்று தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பது போல தலைவர் என்ற பெயரில் உலா வருபவர்களைப் பார்த்தால் மனதில் குருதி கொப்பளிக்கிறது.
எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்பொழுதெல்லாம் நான் வருவேன் என்ற கீதாச்சார வரிகளின்படி, ஏதாவது நடந்து நம் பழைய நிலைமை திரும்பி வராதா??? என்ற எண்ணத்தில்தான் நல்லவர்களின் மனது துடித்துக்கொண்டிருக்கிறது.
நல்ல தலைவர்கள் தமக்கு பிறகு தலைவர்களை உருவாக்கிவிட்டுதான் சென்றார்கள். ஆனால் நாம் கண்டதெல்லாம் என்ன.. கண்டு கொண்டிருப்பதுதான் என்ன?
அதிமுகவில் நடக்கும் கூத்துக்கள்
அதிமுகவில் நடந்து வரும் கூத்துக்கள் நாடறிந்தது. அங்கு தலைவர் ஒருவரே. இரண்டாம் கட்டத் தலைவர்களாக யாரையும் வளர்த்து விடாமலேயே வளர்ந்த கட்சி அது. எம்ஜிஆர் காலத்திலிருந்தே அப்படித்தான். ஜெயலலிதாவுக்கும் இது பொருந்தும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் - என்ற சொல்வடையில் உள்ள பொருள் அனைவருக்கும் விளங்கும். அது போல ஏதோ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகுதான் இந்த மன்னார்குடி மக்கள் கொள்ளை அடித்தது போல் இப்பொழுது ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஆனால், இவையனைத்தும் அவர் இருந்த போது அவரின் ஆசியோடுதான் இந்த கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது என்பதை நாம் மறக்க கூடாது.
ஜெ. நினைத்திருந்தால் செய்திருக்கலாம்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மக்கள் தண்ணீரில் தத்தளித்தபோதே மக்களை வானூர்தியில் வந்து எட்டி பார்த்தவர் நம் முன்னாள் முதல் அமைச்சர். அவருக்கு நிகழ்ந்த மரணம் வருத்தம் தருவதாக இருந்தாலும், இதில் அவருக்கும் ஒரு பங்கு இருப்பதை மறக்க கூடாது. ஏனெனில் அவர் நினைத்திருந்தால் அவர்களை அறவே அண்டவிடாமல் செய்திருக்க முடியும்.
எப்படிப்பட்ட தலைவர்கள் இவர்கள்!
கூவத்தூர் நிகழ்வுகளை நாம் பார்த்தபோதே, நம் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்தினார்கள். "தர்ம யுத்தம்" என்ற வார்த்தையை போட்டு ஊடகத்தினர் உலகத்தின் பார்வையை ஓபிஎஸ் பக்கம் திருப்பினார்கள். இதையெல்லாம் விட வெட்கக்கேடு ஒரு ஆளுநரே ஒரு கட்சியின் இரு தலைவர்களை இணைத்து வைத்தது. இன்று எல்லோருமே எதிர்ப்பார்ப்பது ஒரு நல்ல தலைவரை என்று நமது மனம் சொன்னாலும், நாடு முழுவதும் மக்களை சுரண்டும் தலைவர்களின் ஏதோவொரு கட்சியில் இணைந்து, தாங்களும் முன்னேற வேண்டும் (பணபலத்துடன்) என்று இளைஞர்களின் மனது சொல்வதை உணர முடிகிறது .
திடீர் தலைவர்கள்
இதற்கு நடுவே கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறி எனக்கு பொற்குவை தாரீர் என்ற நடிகரோ அவ்வப்பொழுது அறிக்கை மட்டும் வாசிக்கிறார் அதுவும் டிவிட்டரில் மட்டுமே. இன்னொருவர் ஆண்டவன் சொன்னால் வருவேன் என்றும் சிஸ்டம் சரியில்லையென்றும் கூறிக்கொண்டு, வரவேண்டிய சமயத்தில் வருவேன் என்று சொல்லி கொண்டு அந்த மோசமான ஸிஸ்டத்தின் தலைவர்களை சந்திப்பதையும் பார்க்கமுடிகிறது.
காமராஜர், கக்கன், ராஜாஜி
காமராஜர், கக்கன், ராஜாஜி, தந்தை பெரியார் போன்ற தலைவர்களோடு இப்பொழுது நாம் நிகழ்காலத்தில் பார்க்கும் தலைவர் என்று கூறி கொண்டு திரியும் இவர்களை பார்க்கும் பொது, இதையெல்லாம் பார்க்கும் அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்குமா? ஏனென்றால் நாம் தான் இவர்களையெல்லாம் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு அவர்களின் ஆட்சியில் வாழ்கிறோம். கடவுள் ஏன் கல்லானார்? தினம் கல்லாய் போன மனிதர்களாலே....கல்லாய் போனதனால்தான் நம் மனமும் நாளுக்கு நாள் நடந்து வரும் நிகழ்வுகளை மறந்து விடுகிறது.