சசிகலா பரோல் தாமதத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.. அமைச்சர் கடம்பூர் ராஜு
சசிகிலாவுக்கு பரோல் வழங்குவதில் தமிழக காவல்துறை இழுத்தடிக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகிலாவுக்கு பரோல் வழங்கும் விவகாத்தில் தமிழக காவல்துறை இழுத்தடிக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டணை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்க உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி பெங்களூரு சிறையில் சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார்.
பரோல் கோரி புதிய மனு
ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி சிறை நிர்வாகம் நேற்று முன்தினம் அவரது பரோல் கோரிக்கையை நிராகரித்தது. இதைத்தொடர்ந்து நேற்று கூடுதல் ஆவணங்களை சேர்த்து சசிகலா புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.
காவல்துறை இழுத்தடிக்கிறது
சசிகலா பரோல் பெற தமிழக காவல்துறை என்ஓசி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக தினகரன் தரப்பு குற்றம் சாட்டியது. இதன் காரணமாகவே சசிகலாவுக்கு பரோல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியது.
குற்றச்சாட்டில் உண்மையில்லை
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு தினகரன் தரப்பு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சசிகலா பரோல் விவகாரத்தில் தமிழக காவல்துறை காலதாமதம் செய்வதாக கூறுவதில் உண்மையில்லை என்ற பரோலுக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.
தேவையில்லாமல் பேசுகின்றனர்
மேலும் சசிகலா கர்நாடக சிறையில் இருப்பதால் அவருக்கு பரோல் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது கர்நாடக சிறைத்துறை தான் என்றும் கடம்பூர் ராஜு கூறினார். இதுதொடர்பாக தினகரன் தரப்பு தேவையில்லாமல் பேசுவதாகவும் அப்படிப்பட்ட சூழல் இல்லை என்றும் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.