இந்தியாவிலேயே முதல்முறையாக செல்போனின் சம்மன் அனுப்பும் தமிழக போலீஸ்
தமிழக காவல்துறை நவீனமயமாகி வருகிறது. நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக எஸ்எம்எஸ் மூலம் சம்மன் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக குற்றவழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும் சாட்சிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் சம்மன் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் சிசிடிஎன்எஸ் எனப்படும் கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட் வொர்க் சிஸ்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 500 காவல் நிலையங்களும் ஏற்கெனவே கணினிமயமாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
கம்யூட்டரில் பதிவு
கம்ப்யூட்டரில் பதியப்படும் ஆன்லைன் எப்ஐஆரில் குற்றவாளியின் அனைத்து விவரங்களும் இருக்கும் வகையில் ஒருங்கிணைந்த வலைப் பின்னல் திட்டத்தை தமிழகம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதன்படி இனி யாராவது கைதானால் அடுத்த நிமிடமே அவர்களின் ரத்த உறவுகளுக்கு மொபைலில் எஸ்எம்எஸ் வரும்.
ஒருங்கிணைந்த வலைப்பின்னல்
அடுத்தகட்டமாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள்படி மாநிலம் முழுவதும் உள்ள குற்றவியல் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் தடய அறிவியல் துறையை ஒருங்கிணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த குற்றவியல் வலைப்பின்னல் நீதி பரிபாலனம் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளியின் ஜாதகம்
இதன்படி இனி காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையை கம்ப்யூட்டரில் மட்டுமே பதிய வேண்டும் என்றும், இவ்வாறு பதியப்படும் டைப்-1 ஆன்லைன் எப்ஐஆரில் குற்றவாளியின் முழு ஜாதகமும் இடம்பெறும் வகையில் அனைத்து தகவல்களும் இடம் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவீனமயமான காவல்துறை
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் குற்றவாளியின் கைது மற்றும் சரண்டர் விவரம், ஆஜர் மகஜர், நீதிமன்ற காவல் அடைப்பு, இறுதி அறிக்கை, குற்றப்பத்திரிக்கை, ஜாமீன் போன்ற நீதித்துறை தொடர் பான அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அவற்றை நகல் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளும் இணைப்பு
நீதித்துறை, காவல்துறை, சிறைத்துறை மற்றும் தடயஅறிவியல் ஆகிய துறைகளை ஒருங்கிணைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் இனி காவல் நிலையங்களில் எப்ஐஆரை மாற்ற முடியாது. ஒருமுறை கம்ப் யூட்டரில் பதிவு செய்தால் அதை உயரதிகாரிகளின் அனுமதியின்றி திருத்தவும் முடியாது.
உறவினர்களுக்கு எஸ்எம்எஸ்
இனி யாராவது கைது செய்யப்பட்டால் அடுத்த நிமிடமே அவர்களின் ரத்த உறவுகளுக்கு மொபைலில் எஸ்எம்எஸ் சென்றுவிடும். அதில் இந்த குற்ற வழக்கு எண்ணில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படும்.
எல்லாமே ஆன்லைன்
ஆவணங்கள் தொலைந்து போனதற்கான மிஸ்சிங் சான்றிதழ்கள் ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் முறையை தமிழக காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
எப்ஐஆர், குற்றப் பத்திரிக்கை, நீதிமன்ற அடைப்பு காவல் அறிக்கை, மருத்துவ அறிக்கை, விபத்து அறிக்கை என துறை ரீதியாக தேவைப்படும் ஆவணங்களையும் ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
நேரடியாக சம்மன்
காவல்துறை நவீனமயமாக்கலின் அடுத்த கட்டமாக சாட்சிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவழக்குகளில் தொடர்புடைய சாட்சிகளுக்கு தபால் மூலமே சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. விஐபிகளாக இருந்தால் காவல்துறையினர் நேரடியாக சென்று சம்மன் கொடுத்து வந்தனர். இதனால் வழக்குகளில் சாட்சிகளை தேடி அலைவதே பணியாக இருந்தது. நேர விரயம் ஆனது.
15 நாட்களுக்கு முன்பே சம்மன்
இந்த நிலையில் குற்றவழக்குகளில் தொடர்புடைய சாட்சிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஜிபி டிகே ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபி டிஜிபி சீமா அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர். குற்றவாளிகள், சாட்சிகள் பற்றிய தகவல்களை சேகரித்து 15 நாட்களுக்கு முன்பே எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு விடும். இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டிஜிபி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றங்களும் குற்றவாளிகளும்
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகரானது என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறி வந்தார். இப்போது தமிழக காவல்துறை நிஜமாகவே நவீனமயமாகி வருகிறது. இதேபோல குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து குற்றங்களை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.