காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்கிறது.. அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டம்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்கிறது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்கிறது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு மேலும் கூடுதல் அவகாசம் கேட்டது.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கோரி காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக அமைச்சர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்துக்கு ஓரவஞ்சனை
இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரியில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்கிறது என அவர் குற்றம்சாட்டினார்.
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது
மத்திய அரசு 10 நாள் அவகாசம் கோரியதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என கடுமையாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தோம் என்றும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
இணக்கம் இடமில்லை
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஓஎஸ் மணியன் காவிரி விவகாரத்தில் விவசாயிகள் நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றார். காவிரி விவகாரத்தை தள்ளிப்போடக்கூடாது என மத்திய அரசை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது என்றும் அரசியல் காரணங்களுக்காக தள்ளிப்போட கூடாது என உச்சநீதிமன்றம் கூறியது வரவேற்கத்தக்கது என்றார். தமிழகத்திற்கு 4டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். மேலும் காவிர விவகாரத்தில் இணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார்.
திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள்
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் பிரதமர், அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பரப்புரையில் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள் என்றும் சீமான் குற்றம்சாட்டினார்.
பொறுத்திருப்போம்
இதனிடையே அதிமுக எம்பியான நவநீதகிருஷ்ணன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்துக்கான காவிரி நீரை தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் கூறினார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் அளித்து வருகிறோம் என்ற அவர் நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பார்க்க செவ்வாய்கிழமை வரை பொறுத்திருப்போம் என்றார்.
வஞ்சனை இல்லை
காவிரி வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் காவிரி விவகாரத்தில் உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார். காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் மீது வாஞ்சையுடன் நடக்கிறோம் என்றும் அவர் கூறினார். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு வஞ்சனை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
அரசியல் செய்கிறது
காவிரி விவகாரத்தில் தமிழக அரசுதான் அரசியல் செய்கிறது என்றும் தமிழிசை குற்றம் சாட்டினார். பொதுப்பணித்துறை செயலாளருடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேற்றுக்கூட பேசியுள்ளார் என்ற அவர் காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வுக்காகவே மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது என்றார்.