டிச.5-ல் க்ளைமாக்ஸ்.... உச்சகட்ட நெருக்கடியில் எடப்பாடி அரசு?
தமிழக அரசியலில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உச்சக்கட்ட நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
Recommended Video
சென்னை: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எடப்பாடி அரசுக்கு கடும் நெருக்கடியை சந்திக்கப் போவதாகவும் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுநாளான டிசம்பர் 5-ல் பரபர காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, ஓபிஎஸ் உட்பட 12 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த இரு வழக்குகளிலுமே எடப்பாடி அரசுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் என டெல்லி வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர்.
கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை எடப்பாடி தரப்புக்கான ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர்களே கூறி வருகின்றனராம். அதேபோல் தினகரன் தரப்புக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக்சிங்வியும் நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்புதான் வரும் என தினகரனுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார்.
ஓபிஎஸ்க்கு எதிராக உத்தரவு?
அத்துடன் உண்மையிலேயே கொறடா உத்தரவை மீறிய ஓபிஎஸ் உட்பட 12 எம்.எல்.ஏக்களை உடனே தகுதி நீக்கம் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக இரண்டு தீர்ப்புகள் வரும் நிலையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியாருக்கு ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டாக வேண்டிய சூழல் வரும்.
ஆளுநர் அறைகள் ரெடி
அப்போது எடப்பாடி அரசு சட்டப்படியாகவே கவிழ்ந்துவிடும் என நம்புகிறது டெல்லி. இதற்கு முன்னோட்டமாகத்தான் தற்போதே நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதும் தலைமை செயலகத்தில் ஆளுநரின் அறைகள் தயார் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சட்டசபை முடக்கம்?
சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையில் ஆட்சி கலைப்பு அல்லது சட்டசபை முடக்கம் என்கிற இரண்டில் ஒன்று நடப்பது நிச்சயம். அதன்பின்னர் தமிழக அரசியலில் அத்தனை சித்து விளையாட்டுகளையும் அரங்கேற்றலாம் என காத்திருக்கிறதாம் பாஜக.
இனி டெல்லிதான்
ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாள் டிசம்பர் 5-ந் தேதி வருகிறது. அன்றைய தேதிதான் தமிழக அரசியலில் க்ளைமாக்ஸாக இருக்குமாம். அனேகமாக டிசம்பர் 5-ல் இருந்து தமிழக அரசும் அரசியல் களமும் டெல்லியின் கைகளுக்கு போய்விடும் என்றே கூறப்படுகிறது.