கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் !
சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் விழா கோலாகலமாக தொடங்கியது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் இந்த போட்டி இன்று தொடங்கி செப்டம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது.
போட்டிகள் சென்னை சேப்பாக்கம், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி (திண்டுக்கல்) நெல்லை ஐ.சி.எல். மைதானம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (தென்சென்னை), தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி), ரூபி காஞ்சி வாரியர்ஸ் (காஞ்சீபுரம்), வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் (திருவள்ளூர்), மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் (மதுரை), திண்டுக்கல் டிராகன்ஸ் (திண்டுக்கல்), லைகா கோவை கிங்ஸ் (கோவை), காரைக்குடி காளை (காரைக்குடி) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இன்றைய தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் தூத்துக்குடி அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், நடிகர்கள் தனுஷ், மாதவன், நடிகைகள் ஸ்ரேயா, ஆன்ட்ரீயா, தன்ஷிகா, பாடகர் கார்த்தி, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், நாடு முழுக்க போட்டி பிரபலமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.